தேர்தல் நாளன்று லீவு விடாவிட்டால் கடும் நடவடிக்கை.. லக்கானி மீண்டும் எச்சரிக்கை
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் நாளன்று தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்பட அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மீண்டும் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் வரும் மே 16ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து தனியார் நிறுவனங்கள், ஐ.டி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் என அனைத்தும் சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும். நிறுவன பணியாளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும். தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
இதுவரை தமிழகத்தில் 38,000 வண்ண வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 3,200 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான புகார்கள் மீது 3 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் லக்கானி.