சென்னை ஹோட்டலில் வக்கீல் வெட்டிக் கொலை: பழிக்குப் பழி சம்பவம்
சென்னை: சென்னை அமைந்தகரையில் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த வக்கீல் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைந்தகரை தேவகி அம்மன் தெருவில் வசித்து வந்தவர் நித்யானந்தம் (வயது32). சென்னை ஹைகோர்ட்டில் வக்கீல் பணி செய்து வந்தார். இன்று காலை 9 மணியளவில் நித்யானந்தம் புல்லா அவென்யு ரெட்டி சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தார்.
அப்போது இரண்டு மோட்டார்சைக்கிளில் 4 பேர் அங்கு வந்தனர். கத்தி, வீச்சரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அவர்கள் ஹோட்டலுக்குள் புகுந்தனர்.
கண் இமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் நித்யானந்தத்தை சரமாரியாக வெட்டி சாய்த்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்தார்.
இந்த தாக்குதலின்போது ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். பக்கத்தில் உள்ள கடைகளில் இருந்தவர்கள் எல்லோரும் வெளியே ஓடினார்கள். வக்கீல் உயிர் பிரிந்த பின்னரே அந்த கொலைவெறிக் கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.
மக்கள் நடமாட்டம் நிறைந்த இடத்தில் நடந்த கொலை குறித்து அமைந்தகரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ரவிச்சந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். சடலத்தைக் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
வக்கீல் நித்யானந்தம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தியதில் இந்த கொலை பழிக்குப்பழியாக நடந்தது என தெரிய வந்தது.
கொலையுண்ட நித்யானந்தத்தின் சொந்த ஊர் திருக்குழுகுன்றத்தை அடுத்த பி.வி.களத்தூர் கிராமம். இவரது தந்தை குப்பன். அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளராக இருந்தார். கடந்த 5 மாதத்திற்கு முன்பு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
பி.வி.களத்தூர் பஞ்சாயத்து தலைவராக இருந்த விஜயகுமார் என்பவர் கடந்த 2 வருடத்துக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். அந்த கொலைக்கு முக்கிய காரணமாக இருந்ததாக குப்பனை தீர்த்து கட்டினர்.
தந்தை கொலை செய்யப்பட்ட பிறகு நித்யானந்தம் சென்னைக்கு வந்து தங்கி வக்கீல் தொழில் செய்து வந்தார்.
குப்பனை கொன்ற கும்பல்தான் நித்யானந்தத்தையும் கொன்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். பழிக்குப் பழியாக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.
இணை கமிஷனர் சண்முகவேல், துணை கமிஷனர் சேவியர் தன்ராஜ் மேற்பார்வையில் உதவி கமிஷனர் சுப்பிரமணியன் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. குப்பன் கொலையில் தொடர்புடைய வழக்கை மறைமலைநகர் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இதில் ஈடுபட்டுள்ளார்களா? என விசாரணை நடக்கிறது.