முரசுக்கு வாக்கு கேட்டு தனக்குத்தானே மண் அள்ளிப்போட்ட மாசெ!
சென்னை: முரசு கொட்ட வாக்கு கேட்டு கடைசியில் கட்சியில் இருந்தே முடக்கப்பட்ட மாசெ பற்றி கதை கதையாக கூறுகின்றனர் டாலர்சிட்டி வாசிகள்.
டாலர் சிட்டியில் இலைக்கட்சியின் மாசெவாகவும், சிட்டிங் எம்.பியாகவும் இருந்து அதிரி புதிரியாக சம்பாதித்தவர் சாமியானவர்.
லாரி, கேபிள் டிவி என சம்பாதித்து அரசியலில் கால்வைத்தார். 2009ம் தேர்தலில் அடித்துப்பிடித்து எம்.பியானவர், டெல்லியில் பிரம்மாண்ட ஜவுளிக்கடல் ஒன்றை திறந்தாராம்.
அதோடு நிற்காமல் பெருமாநல்லூரில் பிரம்மாண்ட மாளிகை ஒன்றை எழுப்பியுள்ளார். அந்த வீட்டு கிரகப் பிரவேசத்தில் பங்கேற்றவர்கள் கேட்டதற்கு அம்மா இந்தப்பக்கம் வந்தால் இங்குதான் தங்குவாங்க என்று சொல்லியிருக்கிறார்.
இதை தலைமையிடம் போட்டுக்கொடுத்து அப்போதே கார்டனுக்கு அழைத்து லெப்ட் ரைட் வாங்கியுள்ளனர். அதோடு இருந்திருக்கலாம். இந்தமுறை திருப்பூர் தொகுதியில் சீட் கிடைக்காத விரக்தியில் இருந்த சாமியானவர், டாலர் சிட்டியில் முரசுதான் ஒலிக்கும் என்று சொல்லி வந்தாராம்.
புதுவை லோக்சபா தொகுதியில் தேர்தல் பணிக்கு போனாலும் அங்கேயும் சரியாக வேலை செய்யாமல், டாலர் சிட்டியில் முரசு வேட்பாளருக்கு நிதி வசூலிக்கும் இடத்தின் லிஸ்ட் கொடுத்தாராம். அதுதான் முதல் ஆப்பு என்கின்றனர்.
போன இடத்தில் இருந்து சாமியானவர் செல்போனில் பகிரங்கமாக முரசுக்கு ஓட்டு கேட்டதை ரெக்கார்ட் செய்து போயர் கார்டனுக்கு ஆதாரத்தோடு அனுப்பியும் விட்டனர்.
புதுவையிலும் தோல்வியை சந்தித்தது இலை. அதோடு டாலர் சிட்டியில் முரசு இரண்டாம் இடத்திற்கு வந்துவிட்டதும் கோபத்தை ஏற்படுத்திவிட்டது.
கட்சி சார்பில் நிறுத்தப்பட்டவருக்கு வேலை செய்யாவிட்டாலும் பரவாயில்லை, எதிரிக்கு வாக்கு சேகரிப்பதா என்ற கேள்வி எழவே, மாசெ பதவியில் இருந்து மட்டுமல்ல கட்சியைவிட்டே கட்டம் கட்டப்பட்டார் அந்த சிவமான சாமி என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications