மதுரை: 16 பி.ஆர்.பி கிரானைட் குவாரி உள்பட 39 குவாரி உரிமம் ரத்து
மதுரை: மதுரையில் 39 கிரானைட் குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்து தொழில்துறை அரசு செயலர் உத்தரவிட்டுள்ளார்.
மதுரையில் கிரானைட் குவாரிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, சகாயம் ஐ.ஏ.எஸ். தலைமையிலான குழுவினர் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், மதுரையில் 39 கிரானைட் குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்து தொழில் துறை அரசு செயலர் உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவில், தொடர்ந்து 2 ஆண்டுகளாக கீழவளவு, கீழையூர், இ.மலம்பட்டி, இடையப்பட்டி, இலங்கியேந்தல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வந்த கிரானைட் குவாரிகள் செயல்படாமல் இருந்ததால் அந்த குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார். உரிமம் ரத்தான 39 கிரானைட் குவாரிகளில் 16 குவாரிகள் பி.ஆர்.பி. நிறுவனத்துக்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
39 கிரானைட் குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்துள்ளதற்கான முறைப்படியான அரசாணையை, கனிம வளத் துறை அதிகாரிகள், உரிமம் ரத்து செய்யப்பட்ட குவாரி உரிமையாளர்களிடம் வழங்கும் பணியை இன்று துவக்கி உள்ளனர்.