தேமுதிக - மநகூ- தமாகா கூட்டணி தொகுதிகள் விவரம் இன்று அறிவிப்பு: ஜி.ராமகிருஷ்ணன்
சென்னை: தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா கட்சிகளுக்கான தொகுதி விவரங்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளதாக மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தேமுதிக- மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக 104, மதிமுக 29, தமாகா 26, விடுதலை சிறுத்தைகள் 25, இந்திய கம்யூனிஸ்ட் 25, மார்க்சிஸ்ட் கட்சி 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதனடிப்படையில் எந்தெந்த தொகுதிகளை கட்சிகள் பங்கிட்டுக் கொள்வது என்பது குறித்து கடந்த சில நாட்களாக தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வந்தன.
தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது கட்சி அலுவலகத்தில் வைகோ உள்ளிட்ட மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் நாள்தோறும் சந்தித்து இது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தொகுதிகள் முடிவு செய்யப்பட்டுவிட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி விவரங்கள் இன்று அறிவிக்கப்பட்டுவிடும் என தெரிவித்தார். தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் தொகுதிகள் முடிவு செய்யப்பட்டுவிட்டன.
இன்று காலை விஜயகாந்த் தலைமையில் நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பில் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த அனைத்து தலைவர்களும் கலந்துகொள்கின்றனர். அப்போது தொகுதிகள் அறிவிக்கப்படும் என்றார் ஜி.ராமகிருஷ்ணன்.
கடந்த 10-ந் தேதி நடைபெற்ற மாமண்டூர் பொதுக்கூட்டத்திலேயே தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு தேமுதிகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால் தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டதால் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.