காற்றழுத்தம் புயலானது.. பெயர் ஹெலன்- நாளை ஸ்ரீஹரிகோட்டா அருகே கரையைக் கடக்கும்!
சென்னை: எதிர்பார்த்தபடி, மத்திய வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் தற்போது வலுவடைந்து புயலாக மாறியுள்ளது.
இந்தப் புயலுக்கு ஹெலன் என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஹெலன் என்பது கிரேக்க வார்த்தையாகும். இதற்கு அர்த்தம் பிரகாசமான ஒளி என்று அர்த்தம். வங்கதேசம்தான் இந்தப் பெயரை புயலுக்குச் சூட்டியுள்ளது
மேற்கு மத்திய வங்கக் கடலில்
மத்திய வங்கக்கடலில் அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியிருந்தது. தற்போது இது புயலாக உருப்பெற்றுள்ளது.
சென்னைக்கு வட கிழக்கில் 460 கி.மீ் தொலைவில்
இந்தப் புயல் தற்போது சென்னைக்கு கிழக்கு வடகிழக்கே 460 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
மேலும் வலுவடைந்து நகரும்
இந்தப் புயல் மேலும் வலுவடைந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கில் நகரும். பின்னர் மேற்கு தென் மேற்கில் நகரும்.
நாளை இரவு ஸ்ரீஹரிகோட்டா அருகே கரையைக் கடக்கும்
நாளை இரவு ஸ்ரீஹரிகோட்டா, ஓங்கோல் இடையே காவாலி பகுதியில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடைசிப் புயல் பாலின்
கடைசியாக இந்தியக் கரையைத் தாக்கிய புயல் பாலின். இந்தப் புயலால் ஒடிஷா, ஆந்திர மாநிலங்கள் சேதத்தைச் சந்தித்தன.
2வது புயல்
நடப்பு வட கிழக்குப் பருவமழைக் காலத்தில் இதுவரை பாலின் புயல் மட்டுமே இந்தியாவைத் தாக்கியுள்ளது. எனவே ஹெலன் புயல் 2வது புயலாகும்.
தெற்கு ஆந்திரா, வட தமிழகம், புதுவைக்கு கன மழை
இந்தப் புயல் காரணமாக தெற்கு ஆந்திரா, வடக்கு தமிழகம், புதுச்சேரியில் கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது. சில இடங்களில் மிக பலத்த மழையையும் எதிர்பார்க்கலாம். இன்று மாலைக்கு மேல் இங்கு மழை பெய்யத் தொடங்கும்.
22ம் தேதி வடக்கு தமிழகத்தில் கன மழை
22ம் தேதி வடக்கு தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் வடக்கு தமிழகம், புதுச்சேரியில் மணிக்கு 55 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசும்.
ஆந்திராவுக்கே சேதம் அதிகம்
ஹெலன் புயலால் தெற்கு ஆந்திராவுக்குத்தான் பெருத்த சேதம் ஏற்படும் என்று தெரிகிறது. அதேசமயம், வடக்கு தமிழகம் மற்றும் புதுவைக்கு நல்ல மழை கிடைக்க வாய்ப்புள்ளது.