சிலிண்டர் மானியத்துக்கு ஆதார் அட்டை: மத்திய அரசுக்கு நோட்டீஸ்!
விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்த ஆனந்தமுருகன் என்பவர், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஒரு பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், ''அரசின் சலுகைகளை பெற ஆதார் அட்டை கட்டாயம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள சில கேஸ் ஏஜென்சி நிறுவனங்கள், சிலிண்டர் மானியம் பெற வாடிக்கையாளர்கள் ஆதார் அட்டை எண்ணை பதிவு செய்ய வேண்டும் என்றும், அதனை வங்கி கணக்கில் இணைக்க வேண்டும் என்றும் கூறி வருகிறது.
மேலும் வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஆதார் அட்டை எண்ணை பதிவு செய்யவில்லை என்றால் மானியம் வழங்கப்படமாட்டாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி இது நடைபெற்று வருகிறது. எனவே சமையல் கேஸ் மானியம் பெற ஆதார் அட்டை தேவையில்லை என்றும், சிலிண்டர் பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியம் இல்லை என்றும் உத்தரவிட வேண்டும்.
மேலும், ஆதார் அட்டை எண்ணை பதிவு செய்ய வற்புறுத்தும் நிறுவனங்களின் லைசென்சை ரத்து செய்ய வேண்டும்'' எனக் கூறியிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் சுதாகர், வேலு மணி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அவர்கள் ஆதார் அட்டை தொடர்பாக மத்திய உள்துறைச் செயலாளர், பெட்ரோல் துறை செயலாளர், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அதிகாரி உள்பட 5 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.