லோக்சபா தேர்தல்: பாஜக அணியில் தேமுதிகவுக்கு 11, மதிமுகவுக்கு 9?
சென்னை: லோக்சபா தேர்தலில் பாஜக அணியில் தேமுதிக, பாமக இணைந்தால் அந்தக் கட்சிகளுக்கு முறையே 11 தொகுதி, 9 தொகுதிகளை ஒதுக்க பாஜக முடிவு செய்துள்ளது. அதே போல மதிமுகவுக்கும் 9 தொகுதிகளை ஒதுக்க திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.
லோக்சபா தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அறிவித்தாலும் இடதுசாரிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது. திமுக அணியில் விடுதலை சிறுத்தைகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி மற்றும் புதிய தமிழகம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
தேமுதிக- திமுக இடையே கூட்டணி உருவாகுமா என்ற கேள்விக்கு இன்னும் விடை இல்லை. அதே நேரத்தில் தேமுதிகவை எப்படியும் கூட்டணிக்குள் கொண்டுவருவதில் பாரதிய ஜனதா மும்முரம் காட்டி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தேமுதிகவுக்கு 11 தொகுதிகள்..
பாரதிய ஜனதா தலைமையிலான அணியில் தேமுதிக இணைந்தால் அந்த கட்சி விருப்பப்படியே பெரிய கட்சி என்ற அந்தஸ்தை வழங்கும் வகையில் 11 தொகுதிகளை ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
பாஜகவுக்கு 10 தொகுதிகள்
அண்மைய கருத்து கணிப்புகளின்படி மிரட்டும் அளவுக்கு இருக்கும் பாஜக 10 தொகுதிகளில் போட்டியிடவும் திட்டமிட்டிருக்கிறதாம்.
பாமக, மதிமுகவுக்கு சம அந்தஸ்து
பாமக மற்றும் மதிமுகவுக்கு தங்களது கூட்டணியில் சம அந்தஸ்து வழங்கும் வகையில் தலா 9 தொகுதிகளையும் ஒதுக்க பாஜக முடிவு செய்துள்ளதாம்.
அன்புமணி பிடிவாதம்
பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தே தீருவது என்ற முடிவில் உறுதியாக அன்புமணி இருப்பதாலேயே 9 தொகுதிகள் வரை ஒதுக்கவும் பாஜக முன்வந்துள்ளதாம்.
குட்டி கட்சிகள்..
இந்திய ஜனநாயக கட்சி, கொங்கு நாடு மக்கள் கழகம் போன்றவையோ அல்லது பாமக பரிந்துரைக்கும் ஜாதி கட்சிகளோ கூட்டணியில் இடம்பெற்றாலும் அவற்றை பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட வைக்கவும் திட்டம் இருக்கிறதாம்.
மெகா கூட்டணி கனவு
பிப்ரவரி 2-ந் தேதி உளுந்தூர்பேட்டை மாநாட்டில்தான் கூட்டணி பற்றிய முடிவு அறிவிப்பேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்தாலும் மெகா கூட்டணி அமைந்துவிடும்.. இப்படித்தான் தொகுதி பங்கீடு இருக்கும் என்ற கனவில் மிதந்து கொண்டிருக்கிறதாம் பாஜக