விலகிய சந்திர கிரகணம்.. இயல்பு நிலைக்கு திரும்பிய நிலா..!
சந்திர கிரகணம் விலகியதையடுத்து நிலவு வழக்கம்போல் ஒளிர தொடங்கியுள்ளது.
சென்னை: சந்திர கிரகணம் விலகியதையடுத்து நிலவு வழக்கம்போல் காட்சியளிக்க தொடங்கியுள்ளது.
சுமார் 150 ஆண்டுகளுக்குப் பிறகு வானில் இன்று அபூர்வ சந்திர கிரகணம் நடைபெற்றது. இரவு 7.38 மணி வரை முழு சந்திர கிரகணம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து கிரகணம் மெல்ல விலக தொடங்கியது. இதனால் அதுவரை கருஞ்சிவப்பாக காட்சியளித்த சந்திரன் மெல்ல படி படியாக ஒளிர தொடங்கியது.
திரண்டு ரசித்த மக்கள்
இந்த ரம்மியமான காட்சியை ஏராளமான மக்கள் தங்களின் வீட்டு மொட்டை மாடிகளில் நின்று கண்டுகளித்தனர். இதேபோல் சென்னை மெரினா கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை பகுதியிலும் மக்கள் கூட்டமாக திரண்டு கண்டு ரசித்தனர்.
இயல்புக்கு திரும்பிய நிலா
பின்னர் இரவு 8.43 மணியளவில் கிரகணம் முழுமையாக விலகியது. இதைத்தொடர்ந்து நிலவு மீண்டும் இயல்பு நிலையில் வழக்கம்போல் காட்சியளிக்க தொடங்கியது.
பளிச்சென ஒளிரும் நிலா
சூப்பர் மூன் என்பதால் வழக்கத்தை விட பெரியதாக காட்சியளிக்கிறது நிலவு. இதனால் வெள்ளியை உருக்கி ஊற்றியது போல் பளிச்சென ஒளிர தொடங்கியுள்ளது நிலா.
வழக்கம்போல் காட்சியளிக்கும் நிலா
பின்னர் இரவு 9.38 மணிக்குப் பிறகு பூமியின் அரி நிழலில் இருந்து விலகி நிலா எப்போதும் போல் முழு ஒளியுடன் பழைய நிலைக்கு திரும்பும். இதைத்தொடர்ந்து நிலவு வழக்கம்போல் காட்சியளிக்கும்.