ஆளுநருக்கு வாழ்த்து சொல்ல காத்திருக்க வைக்கப்பட்டாரா மு.க. ஸ்டாலின்?
புதிய ஆளுநராக பொறுப்பேற்ற பன்வாரிலாலை சந்திக்க எப்போது நேரம் கிடைக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேட்டதால் நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
சென்னை: புதிய ஆளுநருக்கு வாழ்த்து சொல்ல எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் காத்திருக்க வைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. எப்போது வாழ்த்து தெரிவிக்கலாம் என்று ஸ்டாலின் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தின் புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் பதவியேற்றுக் கொண்டார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
கிண்டி ராஜ்பவனில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோருக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதே போன்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் முன் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
காத்திருக்கவைக்கப்பட்டாரா ஸ்டாலின்?
ஆளுநர் பொறுப்பேற்றவுடன் முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து தெரிவித்தனர். இவர்களைத் தொடர்ந்து அமைச்சர்கள் வாழ்த்து தெரிவிப்பதற்காக வரிசையில் காத்திருந்தனர். ஆனால் முதல்வர், துணை முதல்வரைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவருக்குத் தான் வாழ்த்து சொல்ல அனுமதி வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
ஸ்டாலின் கேள்வியால் பரபரப்பு
இதனை வலியுறுத்தும் விதமாக மேடைக்கு அருகில் சென்ற ஸ்டாலின் ராஜ்பவன் அதிகாரிகளிடம் எப்போது ஆளுநரை சந்தித்து வாழ்த்து சொல்ல நேரம் கிடைக்கும் என்று கேட்டுள்ளார். இதனால் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பதறிய அதிகாரிகள்
இதனையடுத்து அதிகாரிகள் உடனடியாக ஸ்டாலினை மேடைக்கு அழைத்து அவர் ஆளுநருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வாய்ப்பை அளித்தனர். மேடைக்குச் சென்ற ஸ்டாலின் ஆளுநருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
விழா மேடையில் சலசலப்பு
மேலும் பாஜகவைச் சேர்ந்த தமிழிசை சவுந்திரராஜன், இல. கணேசன், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் ஆளுநருக்கு வாழ்த்து தெரிவித்தனர். எனினும் திடீரென ஸ்டாலின் அதிகாரிகளிடம் எப்போது எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கேட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.