ஜெ.வாட்ச்சை திருடவா கொடநாடு வந்தார்கள்...நம்புகிற மாதிரி இல்லையே... மு.க.ஸ்டாலின் சந்தேகம்
ஜெயலலிதாவின் கைக்கடிகாரத்தை திருடவா கொள்ளைக் கும்பல் கொடநாடு வந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.
சென்னை: ஜெயலலிதாவின் கைக்கடிகாரங்களையும்,அலங்காரப் பொருட்களையும் திருடிச் செல்லும் நோக்கத்தோடுதான் கொள்ளையர்கள் கொடநாடு எஸ்டேட் வந்தனர் என்று போலீசார் கூறுவது நம்பும்படி இல்லை என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கொடநாடு சம்பவம் குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கை உள்துறை செயலர் கண்காணிக்க வேண்டும். அதேபோல் வாகன விபத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் இறந்தது குறித்தும் விசாரிக்க வேண்டும். எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொலை, புதிய மர்மமாக உருவாகி இருக்கிறது.
திரைப்பட திகில் காட்சிகள்
அடுத்தடுத்து நடைபெறும் நிகழ்வுகள் திரைப்பட திகில் காட்சிகளை மிஞ்சும் வகையில் உள்ளது. ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் முக்கிய குற்றவாளி என்றால் அவர் எப்படி விபத்தில் இறந்தார்?
உரிய விளக்கம் இல்லை
கொலை, கொள்ளையில் கனகராஜூக்கு உதவிய சயன் என்பவரும் எப்படி வேறு ஒரு விபத்தில் சிக்கினார். பல்வேறு கேள்விகளுக்கு காவல்துறை இதுவரை சரியான விளக்கம் தரவில்லை.
கை கடிகாரம் திருடினார்களா?
கொடநாடு எஸ்டேட்டில் கை கடிகாரம் திருட சிலர் முயன்றதாக காவல்துறை சொல்வது நம்பும்படி இல்லை. கொள்ளையடித்த கை கடிகாரங்களை கொள்ளையர்கள் ஏன் ஆற்றில் வீசினார்கள்? என்பது புரியாத புதிராக உள்ளது.
ஏடிஜிபி அந்தஸ்து அதிகாரி
விபத்தில் இறந்த கனகராஜ் முதல்வர் பழனிசாமிக்கு உறவினர் என்ற செய்தியை புறந்தள்ள முடியாது. கனகராஜ் திட்டமிட்டு சாகடிக்கப்பட்டதாக அவரது சகோதரர் தனபால் பேட்டி கொடுத்துள்ளார். கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கை ஏ.டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள அதிகாரி விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.