மலேசியாவுக்குள் நுழைய வைகோவுக்கு தடை.. ஸ்டாலின் கடும் கண்டனம்
மலேசியாவுக்குள் நுழைய வைகோவுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: மலேசியாவிற்குள் நுழைய விடாமல் வைகோ தடுத்து நிறுத்தப்பட்டதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமியின் இல்ல திருமணத்தில் கலந்து கொள்ள வைகோ அந்நாட்டுக்கு சென்றார். கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைகோவை மலேசிய அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
வைகோ ஒரு இலங்கை குடிமகன் என்றும் அவர் மீது இலங்கையில் வழக்குகள் உள்ளன எனவும் பொய்க் குற்றச்சாட்டை சுமத்தினர். அத்துடன் மலேசியாவுக்கு ஆபத்தானவர்கள் என்ற பட்டியலில் வைகோவின் பெயரும் இடம்பெற்றுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த வைகோ, தாம் இந்திய குடிமகன் என கூறி வாதிட்டார். ஆனால் வைகோவின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்த மலேசிய அதிகாரிகள் இன்று இரவு அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புகின்றனர். மலேசியாவின் இந்த நடவடிக்கைக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்தி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய வெளியுறவுத் துறை மலேசிய தூதரக அதிகாரிகளை அழைத்து கண்டிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்காதது கவலை அளிக்கிறது. வைகோவை கெளரமாக நடத்த மத்திய அரசு தவறிவிட்டது. சகோதரர் வைகோவை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தியது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.