சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும்... முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்!
காவிரி பிரச்னை குறித்து விவாதிக்க சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: காவிரி பிரச்னை குறித்து விவாதிக்க சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது : காவிரி நீர் பிரச்னைக்காக டெல்லியில் மத்திய அரசு தலைமையில் நடைபெற்ற 4 மாநில அரசு அதிகாரிகளின் கூட்டம் வெறும் கண்துடைப்பு நாடகம். ஆலோசனைக் கூட்டத்தை கர்நாடக தேர்தல் லாபத்துக்காக மத்திய அரசு நடத்தியுள்ளது.
பிரதமரை சந்திக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரக்கை மத்திய நீர்வளத்துறை அமைச்சருடனான சந்திப்பு என குறுகியது. ஆனால் அதுவும் முடியாமல் இன்று மத்திய நீர்வளத்தறை செயலரை மட்டுமே சந்திக்க முடியும் என்று சுருங்கியுள்ளது.
ஜனநாயக ரீதியாக தமிழகத்துக்கு அளிக்கப்பட வேண்டிய வாய்ப்பு வழங்கப்படவில்லை. தமிழக அரசின் குழுவை சந்திக்க மத்திய அரசு விரும்பவில்லை. மத்திய அரசின் செயல் ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது.
காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தை தீர்ப்பில் இல்லை என மத்திய அரசு கூறுகிறது. ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் பிழையான வாதம் செய்துள்ளார். மத்திய நீர்வளத்துறை செயலரின் வாதத்தை தமிழக தலைமைச் செயலர் எதிர்த்தாரா?
உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றி தமிழக உழவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.