எனக்கு போட்டியாளரே இல்லை.. சொல்கிறார் ஆர்.கே.நகர் ஓபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனன்
சென்னை: டி.டி.வி. தினகரனைப் பொறுத்தவரை அவர் வெளியூர்காரர். எனக்கு போட்டியாளரே இல்லை. என்று ஆர்.கே.நகர் தொகுதி ஓபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணமடைந்ததால், ஆர்.கே.நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 12ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஓ.பி.எஸ். அதிமுக சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மதுசூதனன் கூறுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என் மீது எப்போதும் நல்லெண்ணம் வைத்திருந்தார். அவரது நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கினேன்.
ஆனால் சசிகலாவால் எனக்கு நீண்டகாலமாக தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட சோகமான முடிவுக்கு காரணமானவர்களை எதிர்த்து நடைபெறும் தர்மயுத்தத்தில் எங்கள் பலத்தை காட்டவே இப்போது தேர்தலில் போட்டியிடுகிறேன்.
1991 முதல் 96-ம் ஆண்டு வரை நான் ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த போது பல நலத் திட்டங்களை செயல்படுத்தினேன். அந்த வகையில் என்னை இந்த தொகுதி மக்களுக்கு தெரியும். டி.டி.வி. தினகரனைப் பொறுத்தவரை அவர் வெளியூர்காரர். எனக்கு போட்டியாளரே இல்லை. அவர் கட்சியில் உறுப்பினராகவே இல்லை. 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தொகுதியில் நான் தங்கி இருக்கிறேன். தொண்டர்கள் அனைவரும் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்.
ஆர்.கே.நகரில் பணபலம் மற்றும் அதிகார பலத்துக்கு எங்களது சொந்த முயற்சியால் சரியான பதிலடி கொடுப்போம். அதற்கான வியூகம் வகுத்து பணபலத்தை முறியடிப்போம். இவ்வாறு அவர் கூறினார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என அதிமுக வேட்பாளரும், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான தினகரன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications