மாறிவரும் சீசன்... சென்னையில் பரவும் ‘மெட்ராஸ் ஐ’
சென்னை: சென்னையில் வெயிலும், மழையும் மாறி மாறி தாக்குவதால் தற்போது ‘மெட்ராஸ்-ஐ' என்று சொல்லப்படும் கண் நோய் வேகமாக பரவி வருகிறது. தினமும் 10 முதல் 15 பேர் வரை இந்த நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இப்போது கண்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.இந்த கண்நோய் கோடை காலத்தில் மட்டுமல்லாமல், குளிர் காலத்திலும் வரக்கூடியது. தற்போது கடுமையான வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் சென்னையில் கண்நோய் பரவுவதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
அறிகுறிகள்
இந்நோய் பாதித்தவர்களுக்கு கண்கள் சிவப்பாக இருக்கும். கண்ணில் இருந்து நீர் வடியும். வலியோடு உருத்தல் ஏற்படும். காலையில் விழிக்கும் போது கண்களை திறக்க கடினமாக இருக்கும். கண்கள் ஒட்டிப்போகும்.
சுத்தம் அவசியம்
சென்னையில்,‘இந்த கண்நோய் தற்போது வேகமாகப் பரவி வருகிறது. கண் நோய் பாதித்தவர்களின் படுக்கை, துண்டு போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்த கூடாது. கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குறைந்தது ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை இது இருக்கும்.
மருத்துவரை அணுகவும்
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் இது பாதிக்கக்கூடியது. சுய மருத்துவம் செய்யாமல் அருகில் உள்ள கண் மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.