பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சேலம் கோவில் யானையை கருணைக் கொலை செய்ய நீதிமன்றம் அனுமதி!
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சேலம் கோவில் யானை ராஜேஸ்வரியை கருணைக் கொலை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
Recommended Video

சென்னை : பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக படுத்தபடுக்கையாக உள்ள சேலம் கோவில் யானை ராஜேஸ்வரியை கருணைக்கொலை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் பராமரிக்கப்படும் பெண் யானை ராஜேஸ்வரி நோய்வாய்ப்பட்டு எழுந்து நடமாட முடியாமல் உள்ளது. காலில் புண் ஏற்பட்டு படுத்த படுக்கையாக இருந்த ராஜேஸ்வரி யானையை கோவில் நிர்வாகத்தினர் பொக்லைன் எந்திர உதவியுடன் எழுந்து நிற்க வைக்க முயற்சித்தனர். ஆனால் அந்த முயற்சியும் கைகொடுக்கவில்லை.

தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக யானை ராஜேஸ்வரி படுத்த படுக்கையாக உள்ளதால் அதன் உடல் முழுவதும் புண்கள் ஏற்பட்டுள்ளன. கால்நடை மருத்துவர்களால் குணப்படுத்த முடியவில்லை என்பதால் யானையை கருணைக் கொலை செய்வதற்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது கருணைக்கொலைக்கு உத்தரவிட முடியுமா என்று அரசு விளக்கமளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து இன்றைய விசாரணையின் போது ஆஜரான அரசு தரப்பு வக்கீல் தொடர்ந்து பல்வேறு சிகிச்சைகள் அளித்த போதும் யானையின் உடல்நிலை சீரடையவில்லை என்று தெரிவித்தார்.
இதனையடுத்து மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, யானை ராஜேஸ்வரிக்கு முறையான மருத்துவ பரிசோதனைகளை செய்து அதன் பின்னர் கருணை கொலை செய்யலாம் என்று நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.
மேலும் யானையை பரிசோதித்து 48 மணி நேரத்திற்குள் அறிக்கை அளிக்கும்படி சேலம் கால்நடை மருத்துவருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மருத்துவ அறிக்கை பெற்றபின் விதிகளைப் பின்பற்றி யானையைக் கருணை கொலை செய்யவேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications