திருச்சி, கரூர் உள்பட 5 மாவட்டங்களில் பொக்லைன் மூலம் மணல் அள்ளத் தடை: ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் உள்ள 9 மணல் குவாரிகளில் இயந்திரங்கள் மூலம் மணல் அள்ள தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சென்னை: திருச்சி, கரூர், அரியலூர், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 9 மணல் குவாரிகளில் பொக்லைன் மூலம் மணல் அள்ள தமிழக அரசுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூர் பகுதியைச் சேர்ந்த பி.எட்டிகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில், அரசு மணல் குவாரிகளில் ஆட்களை வைத்து மணல் அள்ளுவதாக கூறி கூறி பொதுப்பணித்துறையில் அனுமதி பெற்று இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளி வருகின்றனர்.
இதனால் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராஜிவ் ஷக்தேர், ஆர்.சுரேஷ்குமார், 22 மணல் குவாரிகளுக்கு மாநில அளவிலான சுற்றுச் சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதில், 2 மணல் குவாரிகள் பொதுமக்களின் எதிர்ப்பால் மூடப்பட்டுவிட்டது என்று தமிழக அரசு கூறியுள்ளது.
மீதமுள்ள 20 மணல் குவாரிகளில், திருச்சி, கரூர், அரியலூர், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள உன்னியூர், மணமேடு, சுள்ளங்குடி, கரியமாணிக்கம் மேற்கு, கிள்ளியனூர், திருவாசி, நஞ்சைதோட்டக்குறிச்சி, காமாட்சிபேட்டை, ஆழங்காத்தான் ஆகிய 9 இடங்களில் ஆட்களை கொண்டு மணல் அள்ள மட்டுமே சுற்றுச்சூழல் அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
ஆனால் அதற்கு நேர்மாறாக 9 குவாரிகளில் எந்திரங்களை அதிகாரிகள் பயன்படுத்தியுள்ளனர். இதை அனுமதிக்க முடியாது. எனவே, இந்த 9 மணல் குவாரிகளில் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ள தடை விதிக்கிறோம். வழக்கு விசாரணையை ஜூன் 19-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.