2000 ரூபாய் நோட்டில் தேவநாகரி எண்.. ரிசர்வ் வங்கி விளக்கமளிக்க மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு
2 ஆயிரம் ரூபாய் நோட்டில் தேவநாகரி எண் இடம்பெற்றுள்ளது தொடர்பான வழக்கை விசாரணை 4 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
மதுரை: அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக புதிதாக வெளியிடப்பட்டுள்ள ரூ.2000 நோட்டுகளில் தேவநாகரி எண் வடிவம் இடம் பெற்றிருப்பதால், அந்த நோட்டுகளை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கில் ரிசர்வ் வங்கி பதில் மனுத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த அக்ரிகணேசன், ஹைகோர்ட் மதுரை கிளையில் ஒரு மனுதாக்கல் செய்திருந்தார். அதில் "இந்தியாவில் புழக்கத்தில் இருந்து வந்த 500, 1000 ருபாய் நோட்டுகளை மத்திய அரசு செல்லாது என அறிவித்து உள்ளது. இதனை தொடர்ந்து ரிசர்வ் வங்கி புதிதாக ரூ.2000 நோட்டுகளை வெளியிட்டுள்ளது. இந்த 2000 ரூபாய் நோட்டில் சர்வதேச அளவில் பயன்பாட்டில் உள்ள எண்களின் வடிவங்களுக்கு பதில், தேவநாகரி வடிவத்தில் எண்களை குறிப்பிட்டு உள்ளனர்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, 2000 ரூபாய் நோட்டுகளில் தேவநாகரி எண் வடிவத்தை பயன்படுத்தியது தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு தெரிவிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எஸ்.நாகமுத்து அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.