மதுரை கிரானைட் முறைகேடு.. மேலும் 13 வழக்குகளைத் தொடர்ந்தார் மதுரை கலெக்டர்
மதுரை: மதுரை சுற்று வட்டாரத்தில் சட்டவிரோதமாக இருப்பு வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை அரசுடமையாக்க வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்ரமணியம் சார்பில் இன்று 13 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
அனைத்து வழக்குகளும் மதுரை மேலூர் கோர்ட்டில் இன்று தொடரப்பட்டன.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கிரானைட் நிறுவனங்கள், அவர்களின் சட்டவிரோத செயல்களால் அரசுக்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது தொடர்பான அறிக்கையை வெளியிட்டு பெரும் பரபரப்பைக் கிளப்பியவர் முன்னாள் கலெக்டரான சகாயம்.
இதையடுத்து அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது. சகாயம் கலெக்டராக இருந்த நிலையில் திடீரென மாற்றப்பட்டார். இதையடுத்து வந்த அன்ஷுல் மிஸ்ரா தீவிர விசாரணையில் குதித்தார். சடசடவென்று பல வழக்குகள் பதிவாகின. இதில் பி.ஆர்.பி கிரானைட்ஸ் அதிபர் பி.ஆர். பழனிச்சாமி உள்ளிட்ட பலரும் சிக்கிக் கைதாகினர்.
இந்த நிலையில் இன்று மேலூர் கோர்ட்டில் மேலும் 13 வழக்குகள் போடப்பட்டுள்ளன. இதையும் சேர்த்து இதுவரை 77 வழக்குகள் மேலூர் கோர்ட்டில் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.