மதுரையில் ஒருநாள்... அரசு மருத்துவனைக்கு 13 நிமிடத்தில் பறந்த இதயம்
மதுரையில் இதய மாற்று அறுவை சிகிச்சையில் அரசு மருத்துவமனை முதன் முதலாக மாற்று இதயம் பொருத்தி சாதனை படைத்துள்ளது.
மதுரை: மதுரையில் விபத்தில் சிக்கி மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டன. மதுரை அரசு மருத்துவமனையில் முதன் முறையாக இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தைச் சேர்ந்த ஆண்டி என்பவரின் மகன் முருகேசன்,25. இவர் அப்பகுதியில் நடந்த விபத்தில் கடந்த அக்டோபர் 18ஆம் தேதி படுகாயமடைந்தார். அக்டோபர் 19ஆம் தேதி மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு மூளைச்சாவடைந்தார்.
இந்நிலையில் முருகேசனின் பெற்றோர், தங்களது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். அந்த அடிப்படையில் இன்று அவரது உடலிலிருந்து இதயம், நுரையீரல், கிட்னி, கண்கள் உள்ளிட்ட உறுப்புகள் அகற்றப்பட்டு, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, சென்னையிலுள்ள குளோபல் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டன.
இந்நிலையில் இதயக் கோளாறு காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தங்கி உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் உசிலம்பட்டியைச் சேர்ந்த சௌந்தரபாண்டிக்கு,46, முருகேசனது இதயம் இன்று தானமாக வழங்கப்பட்டது.
இதற்காக இன்று பிற்பகல் 1.40 மணியளவில் வேலம்மாள் மருத்துவமனையிலிருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலமாக இதயம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு 2 மணியளவில் கொண்டு வரப்பட்டது.
இதுகுறித்து ஆம்புலன்ஸ் டிரைவர் உதயகுமார் கூறுகையில், 'வேலம்மாள் மருத்துவமனையிலிருந்து 13 கி.மீ. தொலைவு பயணம் செய்து, மதுரை அரசு மருத்துவமனைக்கு வெறும் 8 நிமிடங்களில் வந்து சேர்ந்தோம். 15 நிமிடங்களுக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்திருந்தனர். நாங்கள் 80 கி.மீ வேகத்தில் பயணம் செய்து குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே இங்கு கொண்டு வந்து சேர்த்ததை பெரும் புண்ணியமாகக் கருதுகிறோம்' என்றார்.
நான்கு வழிச்சாலையில் விரகனூர் அருகேயுள்ள வேலம்மாள் மருத்துவமனையிலிருந்து பாண்டிகோவில் வழியாக, மேலமடை, பால்பண்ணை, அண்ணாபேருந்துநிலையம் சந்திப்பு வழியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு இதயம் கொண்டு வரப்பட்டு, தற்போது இதய நோயாளி சௌந்தரபாண்டிக்குப் பொருத்தும் சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
மதுரை அரசு மருத்துவமனையின் இருதயவியல் துறைத் தலைவர் ரத்தினவேல் தலைமையிலான குழுவினர் இதய மாற்று அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டனர். தனியார் மருத்துவமனையிலிருந்து அரசு மருத்துவமனைக்கு இதயம் உறுப்புதானமாக வழங்கப்படுவது தென்மாவட்டத்திலேயே இதுதான் முதல் முறையாகும்.