வாடிவாசல் திறக்காமல் ரயிலுக்கு வழி விடமாட்டோம்... மதுரை இளைஞர்களின் முழக்கம்
நாங்க எல்லாம் சுனாமியில ஸ்விம்மிங் போட்டவங்க என்ற டயலாக் இனி மாறி விடும்... நாங்க எல்லாம் ஓடுற ரயிலையே மறிச்சவங்கடா... என்ற டயலாக் சினிமாவில் இடம் பெறும் என்பது உண்மை.
மதுரை: நீங்க அவசரம் சட்டம் போடுங்க... அதுவும் உடனே போடுங்க... நிரந்தரமாக இதுக்கு ஒரு தீர்வு வரணும். ஜல்லிக்கட்டு நடந்தாதான் நாங்க இந்த ரயிலுக்கு வழி விடுவோம் என்பது மதுரை வைகை ஆற்று பாலத்தில் ரயிலை மறித்து போராட்டம் நடத்தும் புரட்சி இளைஞர்களின் குரல்.
ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தி அலங்காநல்லூரில் திங்கட்கிழமை தொடங்கிய 'காளை புரட்சி' தமிழகமெங்கும் பற்றிப் பரவி கொளுந்து விட்டு எரிந்து வருகிறது.
சென்னை தொடங்கி நெல்லை வரை பெரும் நெருப்பாய் பற்றி எரிகிறது ஜல்லிக்கட்டுக்கான் ஆதரவு போராட்டம். பச்சிளம் குழந்தைகள் முதல் 92 வயது வரையிலான பாட்டி வரை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடி வருகின்றனர்.
5வது நாளாக போராட்டம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் 5வது நாளாக தீவிரம் அடைந்து வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு புகழ் பெற்ற மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் வலுத்துள்ளது. அலங்காநல்லூர், மதுரை, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாணவ-மாணவிகள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமுக்கத்தில் 2 லட்சம் பேர்
மதுரை தமுக்கம் மைதானத்தில் விடிய விடிய போராட்டம் நடைபெற்று வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புலியை விரட்டி அடிச்ச வீர பரம்பரையை சேர்ந்தவங்க நாங்க. எங்க வீட்டு புள்ளை காளை அதை நாங்க வதைப்போமா? என்று கேட்கின்றனர்.
சிறுமிகளின் முழக்கம்
பெரியவர்கள், இளைஞர்கள், கல்லூரி மாணவிகள் மட்டுமல்ல பள்ளி சிறுமிகளும், சிறுவர்களும் கூட ஜல்லிக்கட்டுக்காக நடைபெறும் காளை புரட்சியில் பங்கேற்று முழக்கமிடுகின்றனர். போகோவும், டோராபுஜ்ஜியும் பார்த்து பொழுதை கழித்த குழந்தைகள் இன்றைக்கு ஜல்லிக்கட்டுக்காக போராட்ட களத்தில் இறங்கியுள்ளனர்.
பலே புள்ளிவிபரம்
ஜல்லிக்கட்டுக்கு தடை ஏன் விதிக்கப்பட்டது என்று தொடங்கி அரசியலமைப்பு சட்டம் வரைக்கும் பேசுகின்றனர். அவசர சட்டம் ஏன்? நிரந்தர தீர்வு வேண்டும் என்றும் எங்களை ஏமாற்ற முடியாது என்றும் வீர வேஷமாக பேசி வருகின்றனர் குடும்பத்தலைவிகள்.
பீட்டாவை பாட்டாவால் அடிப்போம்
தமுக்கம் சாலையில் திரண்டுள்ளவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவை தடை செய்ய வலியுறுத்தி முழக்கமிடுகின்றனர். பீட்டாவை பாட்டா செருப்பால் அடித்து விரட்டுவோம் என்பது அவர்களின் முழக்கமாக உள்ளது. வேண்டும் வேண்டும் ஜல்லிக்கட்டு வேண்டும்... தடை செய் தடை செய் பீட்டாவை தடை என்ற முழக்கம் விண்ணை எட்டுகிறது.
சிலம்பாட்டம்
தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளையும் மாணவர்கள் போராட்டக் களத்தில் விளையாடி உற்சாகப்படுத்தி வருகிறார்கள். இனியொரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்... ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியில்லை எனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம் என்றும் பாரதியின் பாடலை சற்றே மாற்றி பாடுகின்றனர்.