"மகாராஜா" சொகுசு விரைவு ரயில் தமிழகம் வருகிறது! என்னென்ன வசதிகள் இருக்கு தெரியுமா?
திருவனந்தபுரத்தில் இருந்து காரைக்குடி, செட்டிநாடு வழியாக மும்பைக்கு மகாராஜா விரைவு ரயில் என்கிற சுற்றுலா சொகுசு ரயிலை ஐஆர்சிடிசி இயக்க உள்ளது.
சென்னை: ஐஆர்சிடிசி மூலம் இயக்கப்பட்டு வரும் உலக புகழ்பெற்ற மகாராஜா சொகுசு விரைவு ரயில் வருகிற ஜூலை மாதம் தமிழகம் வருகிறது.
உலக அளவில் புகழ்பெற்ற மகாராஜா விரைவு ரயில் என்கிற சுற்றுலா ரயிலை ஐஆர்சிடிசி இயக்கி வருகிறது. இதுவரை மும்பையில் இருந்து ஜெய்ப்பூர், ஜோத்பூர், ஆக்ரா உள்ளிட்ட வடமாநில நகரங்களுக்கு இயக்கப்பட்ட இந்த ரயில் முதன் முறையாகத் தென் மாநிலங்களுக்கு வருகிறது.
திருவனந்தபுரத்தில் இருந்து ஜூலை ஒன்றாம் தேதி புறப்படும் இந்த ரயில் காரைக்குடி, செட்டிநாடு, சென்னை, மைசூர், கோவா வழியாக மும்பை வரை செல்கிறது. இதற்கான கட்டணம் லட்சக் கணக்கில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டீலக்ஸ் கேபினுக்கு 5 லட்சத்து 680 ரூபாய், ஜூனியர் சூட் வகுப்புக்கு 7 லட்சத்து 23,420 ரூபாய், சூட் வகுப்புக்குப் 10 லட்சத்து 9,330 ரூபாய், பிரசிடென்சியல் சூட் வகுப்புக்கு 17 லட்சத்து 33,410 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒருவருக்கு இந்தக் கட்டணம் செலுத்தினால் உடன் வரும் ஒருவர் கட்டணமில்லாமல் இலவசமாகப் பயணிக்கலாம். இதில் ரயில் கட்டணம், 8 நாட்களுக்கான உணவுக் கட்டணம், வழியில் நட்சத்திர விடுதிகளில் தங்கும் கட்டணம், சுற்றுலாத் தலங்களுக்குச் சுற்றுலாப் பேருந்தில் செல்லும் கட்டணம், நுழைவுக் கட்டணம் ஆகிய அனைத்தும் அடங்கும்.
மொத்தப் பயணத்துக்கான நாளின் கட்டணமும் அதிகமாக இருப்பதால் மூன்று நாட்களுக்கு இருவருக்கு ரூ. 66,500 ஒருவருக்கு 53,200 ரூபாய் என்றும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மிக அதிநவீன வசதிகள் கொண்ட இந்த ரயிலில் தங்கத் தட்டில் உணவு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
சினிமா படப்படிப்பு, பேஷன் நிகழ்ச்சிகள், கார்ப்பரேட் நிறுவனங்களின் நிகழ்ச்சிகள் ஆகியவற்றை மகாராஜா ரயிலில் நடத்திக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது.