சிங்கப்பூர் தமிழர்களின் அச்சத்தை போக்க வேண்டும்: கருணாநிதி
இது குறித்து அவர் விடுத்துள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது
சிங்கப்பூரில் ஏற்பட்ட திடீர் கலவரத்தை தொடர்ந்து, அங்கே வாழ்ந்து வரும் தமிழர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக இரண்டு நாட்களாக செய்தி வந்து கொண்டிருக்கிறதே?
ஆமாம், இந்தச்சம்பவம் காரணமாக சிங்கப்பூர் வாழ் தமிழர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றும் எதிர்காலத்தில் சிங்கப்பூர் செல்ல தமிழர்களுக்கு விசா கிடைப்பது கடினம் என்றும் செய்திகள் பரவத்தொடங்கியுள்ளது. மேலும் சிங்கப்பூரில் இந்தச் சம்பவம் காரணமாக 24 தமிழர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
நீதிமன்றம் அவர்களை 7 நாட்கள் காவலிலே வைத்து விசாரிக்க உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால், 7 ஆண்டுகள் வரை, கடுங்காவல் தண்டனை விதிக்கப்படலாம் என சிங்கப்பூர் காவல் துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.
விபத்தில் இறந்த வாலிபர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது. அங்கே வாழ்வாதாரம் தேடுவதற்காக சென்றுள்ள தமிழர்கள் யாரும் இந்த விரும்பத்தகாத சம்பவம் காரணமாக பாதிக்கப்படாமலும், அச்சமின்றியும் அவர்கள், தங்கள் பணிகளைத் தொடர மத்திய, மாநில அரசுகள் அனைத்து முயற்சிகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
இலங்கை அரசின் நடவடிக்கைகள் பற்றி
காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்ட காமரூன் தெரிவித்த கருத்துக்களை பல நாளேடுகளும் வெளியிட்டன. பிரான்ஸ் நாட்டின் கருத்தினைத் தாங்களே வெளியிட்டிருந்தீர்கள். தற்போது அமெரிக்கா, இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுத்ததாக ஒரு செய்தி வந்திருக்கிறதே?
உண்மைதான். 'இலங்கை உள்நாட்டுப்போரில் ராணுவத்தின் அட்டூழியம் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அந்நாடு நடவடிக்கை எடுக்காவிட்டால், சர்வதேச சமூகம் இனியும் பொறுமையாக இருக்காது' என்று தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் நிஷா பிஸ்வால் கூறியிருக்கிறார்.
மேலும் இத்தாலியை சேர்ந்த அரசு சார்பற்ற அமைப்பு ஒன்று, இலங்கை ராணுவத்தின் மீதான போர்க்குற்றம் தொடர்பான வழக்கு விசாரணையில் இறங்கியுள்ளது. இதற்காக ஜெர்மனியில் தனிக்கோர்ட்டு அமைக்கப்பட்டு, 11 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.