144 தடை உத்தரவால் களையிழந்த மெரீனா - வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிப்பு
பொதுக்கூட்டம் நடத்தவும், பேரணி செல்லவும் மெரீனா கடற்கரையில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் சாதாரண பொதுமக்களும், வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி ஒரு வார காலம் நடைபெற்ற மெரீனா புரட்சியால் தமிழக அரசு கதிகலங்கி போனது என்னவோ உண்மை. 23ஆம் தேதி மெரீனாவில் கூடியிருந்தவர்களை வலுக்கட்டாயமாக போலீசார் வெளியேற்றினர்.
இந்த நிலையில் மெரீனா கடற்கரையில் லட்சம் பேர் கூட சமூக வலைத்தளங்கள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டாக உளவுத்துறைக்கு தகவல் வெளியானது. இதனையடுத்து நேப்பியர் பாலம் முதல் களங்கரை விளக்கம் வரை போராட்டம், பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணி முதல் பிப்ரவரி 12ஆம் தேதி வரை மெரீனா, மயிலாப்பூர், அண்ணாசதுக்கம், திருவல்லிக்கேணி, ஐஸ்ஹவுஸ், பட்டினப்பாக்கம் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.
நடைபயிற்சிக்கு தடையில்லை
மெரீனா கடற்கரையில் நடை பயிற்சி செய்யவும், சுற்றுலா பயணிகள் வரவும் தடையில்லை என்று கூறப்பட்டது. எனினும் 144 தடையுத்தரவு அமலில் இருந்த காரணத்தால் மெரீனா கடற்கரைக்கு செல்ல பெரும்பாலான பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. விடுமுறைநாள்களில் கடற்கரையில் கிரிக்கெட் விளையாடுவோரின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது.
களையிழந்த கடற்கரை
நேப்பியர் பாலம் முதல் பட்டினப்பாக்கம் வரை 10 அடிக்கு ஒரு போலீசார் நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீஸ் ரோந்து வாகனமும் சுற்றி வந்தது.
மிக நீண்ட அழகான கடற்கரையான மெரீனாவில் ஞாயிறுக்கிழமைகளில் காலையில் இருந்தே கூட்டம் அலைமோதும். அதிகளவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததைப் பார்த்து வழக்கமாக நடைபயிற்சி செய்வோர் முன்னதாகவே தங்களது பயிற்சியை முடித்துக் கொண்டு வீடு திரும்பினர்.
வியாபாரிகள் பாதிப்பு
கடற்கரையோரத்தில் இருந்த மீன்கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பொதுமக்கள் கடற்கரைக்கு வர ஆர்வம் காட்டாமல் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கினர். பலர் ஷாப்பிங் மால்களில் பொழுதை போக்கினர். இதனால் மெரீனா கடற்கரையில் சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். போலீசாரின் நடவடிக்கைக்கு பெரிதும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்கள்
விடுமுறை நாட்களில் அண்ணா, எம்ஜிஆர்.-ஜெயலலிதா நினைவிடங்களிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும். ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னர் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்துபவர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. 144 தடை உத்தரவுக்குப் பின்னர் பொதுமக்கள் குறைவாகவே வந்து அஞ்சலி செலுத்தினர்.
4 பேர் நின்றிருந்தால் அரஸ்ட்
கடற்கரையில் 4 பேருக்கு மேல் கூட்டமாக கூடி நின்று பேசினாலே கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் கூட்டமாக நின்றிருந்த இளைஞர்களையும், வாகனங்களில் சந்தேகத்திற்கிடமாக சென்றவர்களையும் போலீசார் நிறுத்தி விசாரித்தனர். இதனால் பெரும்பாலான இளைஞர்களும் கடற்கரை சாலையை பயன்படுத்துவதை தவிர்த்து விட்டனர்.