கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரிகள்… தமிழ்நாடு நம்பர் 1
சென்னை: திருமணமான பின்னர் பல்வேறு காரணங்களால் பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் தம்பதியினரின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரத்தின்படி, கிட்டதட்ட 7.9 சதவீத தம்பதியினர் தனியாக பிரிந்து வாழ்வதாக தெரிய வந்துள்ளது. கடந்த முறை கணக்கெடுப்பில் இது 5.2 சதவீதமாக இருந்தது.
பிரம்மசாரியாக இருப்பவர்களை இணைத்து திருமணம் செய்து வைப்பார்கள். ஆனால் வேலை நிமித்தம் தம்பதியர்கள் பிரிவதால் ஏராளமானோர் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரிகளாவே இருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் திருமணமாகியும் பிரிந்து வாழும் தம்பதியினரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணம் அவர்களுக்கு இடையே காணப்படும் வயது வித்தியாசமே என்கிறார்கள் வல்லுனர்கள்.
வயது வித்தியாசம்
கணவன் மனைவிக்கு இடையேயான வயது வித்தியாசம் தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கிறது. மனைவியைவிட 5-6 வயது அதிகமாக காணப்படும் கணவர் மனைவிக்கு முன்னதாகவே இறந்துவிடுவதால் அப்பெண் விதவையாக தனித்து விடப்படுகிறாள். சில வருடங்களுக்கு முன் இந்த வயது வித்தியாசம் 10 ஆண்டுகளாக கூட இருந்தது. இப்போது 4-6 ஆண்டுகளாக குறைந்துள்ளது.
வேலை தேடி பயணம்
இன்னொரு காரணம், தமிழ்நாட்டில் பல கணவன்மார்கள் கிராமப்புறங்களில் இருந்து வேலைக்காக வீடுகளை விட்டு வெகுதூரமிருக்கும் நகரங்களுக்கு செல்கிறார்கள். வீட்டிற்கு வருவதேயில்லை. இதனாலும் கூட குடும்பங்கள் பிரிந்து விடுகின்றன.
பெண்களுக்கு ஆயுள் அதிகம்
மேலும், ஆண்களை விட தமிழ்நாட்டில் பெண்கள் அதிக ஆயுளுடன் வாழ்கிறார்கள். பெரும்பாலான பெண்கள் 60 வயதுக்கு பின் விதவையாக தனித்து வாழ்வதை நாம் பார்க்க முடிகிறது.' என்கிறார் மக்கள்தொகை கணக்கெடுப்பு வல்லுனர் பி.ஆரோக்கியசாமி.
கேரளா நம்பர் 2
அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலும் ஒரு சில சதவிகித வித்தியாசங்களே நிலவுகின்றன. கேரளாவில் 7.3 சதவிகிதம் பேரும், கர்நாடகாவில் 7.1 சதவிகிதம் பேரும், ஆந்திராவில் 7 சதவிகிதம் பேரும் தனித்து வாழ்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
பத்தாண்டுகளில்
கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் 3 சதவிகித ஆண்களும், 15.5 சதவிகித பெண்களும் தனித்து வாழ்ந்தனர். இன்றைக்கு பெண்களும் அதிக அளவில் பணிக்கு செல்வதால் தற்போது தனித்து வாழும் பெண்களின் எண்ணிக்கை பாதி அளவாக குறைந்துள்ளது என்கின்றனர் வல்லுநர்கள்.
நாடுமுழுவதும்
தேசிய அளவில் 2.9 சதவிகித ஆண்களும், 10.1 சதவிகித பெண்களும் தனித்து இருக்கின்றனராம்.