தடுப்பூசி போட்டால்தான் டாஸ்மாக் கடைகளில் மதுபானம்.. கலெக்டர் அதிரடி.. மதுபிரியர்கள் அதிர்ச்சி!
மயிலாடுதுறை: உலகம் முழுவதும் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மக்களை பாடாய்படுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த உதவும் ஒரே பேராயுதம் தடுப்பூசிதான். தமிழ்நாட்டை பொறுத்தவரை தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 12-ம் தேதி முதல் வாரந்தோறும் கொரோனா தடுப்பூசி மெகா சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. முதல் முகாமில் மொத்தம் 40 ஆயிரம் முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன. சென்னையில் மட்டும் 1,600-க்கும் மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

மெகா தடுப்பூசி முகாம்கள்
இந்த முகாமில் 28.06 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டது. இந்த மெகா முகாம்கள் மூலம் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இலக்கை விட கூடுதலாக 8 லட்சம் தடுப்பூசிகள் அதிகம் செலுத்தி சாதனை படைக்கப்பட்டது. இதேபோல் ஒவ்வொரு வாரமும் தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் இலக்கை தாண்டி கூடுதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம்
இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மதுப்பிரியர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்பனை செய்யப்படும் என மாவட்ட கலெக்டர் இரா.லலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: ஆரோக்கியமான தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் தற்போது நம்மை தாக்கிக் கொண்டிருக்கும் கொரோனா பெருந்தொற்றை முற்றிலுமாக ஒழிக்கும் முயற்சியாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் அரசு தற்போது தடுப்பூசி சிறப்பு முகாம்களை அமைத்து செயல்படுத்தி வருகிறது.

குறுஞ்செய்தி
இத்திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் விதமாக மயிலாடுதுறை மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மதுபான பிரியர்களாகிய நுகர்வோர்கள் மதுபானங்களை தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் டாஸ்மாக் கடைகளில் வாங்கும்போது, கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றினை டாஸ்மாக் கடையின் பணியாளர்கள் பதிவு செய்யும் வகையில் அசல் சான்றினையோ அல்லது கைபேசியில் வரப்பெற்ற குறுஞ்செய்தியையோ காண்பித்தால் மட்டுமே மதுபானங்களை நுகர பெற்றுக்கொள்ளலாம்.

மதுபானப் பிரியர்கள் அதிர்ச்சி
இந்த செயற்கரிய செயலுக்கு வாடிக்கையாளர்களாகிய உங்களது முழு ஒத்துழைப்பை அளித்து ஆரோக்கியமான கொரோனா தொற்றில்லா மாவட்டமாக உருவாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார். கலெக்டரின் இந்த அறிவிப்பு மயிலாடுதுறை மாவட்ட மதுபானப் பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications