மேயரை தேர்வு செய்யும் புதிய சட்டதிருத்தம் நிறைவேற்றம் - சபாநாயகர் அறிவிப்பு
சென்னை: மாநகராட்சி மேயரை மாமன்ற உறுப்பினர்களே தேர்வு செய்ய வகை செய்யும் சட்டத்திருத்தம் நிறைவேறியது. 132 உறுப்பினர்களின் ஆதரவுடன் சட்டத் திருத்தம் நிறைவேறியதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். சட்டமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் மேயர் தேர்தல் சட்டத்திருத்தம் நிறைவேறியது.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, ஈரோடு, வேலூர், தஞ்சை, திண்டுக்கல், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய 12 மாநகராட்சிகள் உள்ளன. மாநகராட்சி மேயர்களை மக்கள் நேரடியாக ஓட்டுப்போட்டு தேர்ந்து எடுக்கும் முறை நடைமுறையில் உள்ளது. அதாவது மாநகராட்சி தேர்தலில் மேயர் பதவிக்கு ஒரு ஓட்டும், வார்டு கவுன்சிலர் பதவிக்கு ஒரு ஓட்டும் என மொத்தம் 2 ஓட்டுகள் போட வேண்டும்.
இந்த நிலையில், மேயர் தேர்தல் முறையில் திடீரென்று மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளது. மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் மேலும் சட்ட திருத்தம் செய்வதற்கான சட்ட முன்வடிவு மசோதாக்களை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.
அந்த மசோதாவில், தற்போது, மாநகராட்சிகளுக்கான தேர்தல் கட்சிகளின் அடிப்படையில் நடத்தப்படுகின்றன. சில மாநகராட்சிகளில் மாமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அவ்வளவாக மாநகர மேயருக்கு இல்லாத காரணத்தினால், மாமன்றங்கள் முறையாக செயல்படுவது இல்லை என்று அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.
மாமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மாநகராட்சி மேயருக்கு கிடைக்கும் பட்சத்தில் மாமன்றம் சிறந்த முறையில் செயல்படும் என்று கருதப்பட்டது. அதன் காரணமாக மாமன்ற உறுப்பினர்களால் மறைமுகமாக மாநகராட்சி மேயரை தேர்ந்தெடுப்பது என்று அரசு முடிவு செய்திருக்கிறது.
மேற்சொன்ன முடிவுகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், அரசு மாநகராட்சி தொடர்பான சட்டங்களை பொருந்தத்தக்க வகையில் திருத்தம் செய்வது என்று முடிவு செய்திருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
எதிர்கட்சிகள் எதிர்ப்பு
புதிய சட்டத்திருத்த மசோதவை ஆரம்பத்திலேயே எதிர்ப்பதாக நேற்று திமுக எம்.எல்.ஏ மா.சுப்ரமணியன் கூறினார். குறுக்கு வழியில் பதவிகளை பிடிக்க அதிமுக திட்டமிடுவதாக திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சியினர் குற்றம் சாட்டினர்.
அமைச்சர் விளக்கம்
இந்த சட்டம் தொடர்பாக தொடர்பாக இன்று சட்டசபையில் அமைச்சர் வேலுமணி விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் தனி நபர் நலன் கருதி பல சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அதிமுக ஆட்சியில் மக்கள் நலன் கருதி சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.
அதிமுகவே ஜெயிக்கும்
சட்ட திருத்தம் செய்தாலும், செய்யாவிட்டாலும் உள்ளாட்சிதேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்று வேலுமணி கூறினார். மேயர் தேர்வு செய்வதற்கான சட்ட திருத்தம் தேர்தலுக்காக கொண்டு வரப்பட்டது என்பதை ஏற்க முடியாது. அதிமுக ஆட்சியில் மக்களுக்காக சட்ட திருத்தம் மக்களுக்கான சட்ட திருத்தம். ஆந்திரா, மேற்கு வங்கத்தில் உறுப்பினர்களே மேயரை தேர்வு செய்கின்றனர் என்று கூறினார்.
சட்டத்திருத்தம் நிறைவேற்றம்
இந்த நிலையில் திமுகவின் எதிர்ப்பையும் மீறி சட்டபேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. புதிய சட்ட திருத்த மசோதா 132 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதற்கு 88 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டப்பேரவையில் சட்டத்திருத்த மசோதா நிறைவேறியதாக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் அறிவித்தார்.
உள்ளாட்சி தேர்தல்
அதே போல, தொகுதிகளின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான சட்ட திருத்த மசோதாவும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. மறு சீரமைப்பு, மறு சுழற்சி இல்லாத வகையில் தேர்தலை நடத்த சட்ட திருத்தம் வழி வகை செய்கிறது.