ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு: 500 மதிமுகவினர் கைது! ஆந்திர பஸ்களை சிறைபிடித்து த.வா.கா போராட்டம்!!
திருத்தணி: ஆந்திரா மாநிலம் நகரி அருகே ராஜபச்சே உருவ பொம்மையை எரித்த ஐநூறுக்கும் மேற்பட்ட மதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் திருப்பதியில் அரசியல் கட்சியினர், பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து காஞ்சிபுரம் அருகே ஆந்திரா பேருந்துகளை தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சிறைபிடித்தனர்.
இலங்கை அதிபர் ராஜபக்சே திருப்பதி வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கழகப் பொருளாளர் டாக்டர் மாசிலாமணி தலைமையில், மாவட்டச் செயலாளர்கள் திருவள்ளூர்- டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், காஞ்சி -பாலவாக்கம் சோமு, விழுப்புரம் வடக்கு ஏ.கே.மணி, விழுப்புரம் தெற்கு க.நடராசன் மற்றும் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் பூவை பாபு, திருவள்ளூர் மாவட்டத் துணைச் செயலாளர் ஆவடி அந்திரிதாஸ் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட மதிமுகவினர் ராஜபக்சேவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு திருத்தணியில் இருந்து திருப்பதி நோக்கி கறுப்புக்கொடி காட்டுவதற்கு பேரணியாகச் சென்றனர்.
ஆந்திர மாநில எல்லையான நகரி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது ஆந்திர போலீசார் மற்றும் அதிரடிப்படை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து நெடுஞ்சாலையில் ராஜபக்சேவின் கொடும்பாவியை எரித்து, ஒரு மணி நேரம் சாலை மறியலில் மதிமுகவினர் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்ட மதிமுகவினரை ஆந்திர போலீசார் கைது செய்து நகரியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதேபோல் திருப்பதியில் ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய மதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திரா பேருந்துகள் சிறைபிடிப்பு
இதற்கிடையே, காஞ்சிபுரம் அருகே ஆந்திரப் பேருந்துகளை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வெள்ளைகேட் என்ற இடத்தில், 3 ஆந்திரப் பேருந்துகளை சிறை பிடித்து வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
திருப்பதியில் அரசியல் கட்சியினர் மற்றும் தமிழக பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இருப்பினும் அசம்பாவித சம்பவம் ஏதும் நடைபெறவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.