ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல், டீசலை ஏன் கொண்டு வரவில்லை? சட்டசபையில் விளக்கிய அமைச்சர் ஜெயக்குமார்!
பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வராதது ஏன் என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வராதது ஏன் என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.
சட்டசபையில் நேற்று மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நாள்தோறும் உயர்ந்து கொண்டே வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்குமா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தால் மாநிலத்துக்கு வரும் வரி வருவாய் பாதிக்கப்படும். மேலும் மாநில சுயாட்சி பற்றி பேசும் திமுக, மாநிலத்தின் வரி வருவாயை பாதிக்கும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என எப்படி கேட்கிறார்கள்? என்பது புரியவில்லை" என்றார்.
மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா சில திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியதால்தான் பெட்ரோல், டீசல் மற்றும் மதுபானங்களுக்கான வரிகளை மாநில அரசே விதிக்கலாம் என திருத்தம் கொண்டு வரப்பட்டது.
ஏற்கெனவே மத்திய நிதி ஆணையம் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ரூ. 6,000 கோடி நிலுவையில் உள்ளது. இந்நிலையில், பெட்ரோல், டீசலும் ஜிஎஸ்டிக்குள் வந்தால் அதன் மூலம் கிடைக்கும் வருவாயை மத்திய அரசிடமிருந்து எதிர்பார்க்க வேண்டிய நிலை உண்டாகும். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்தார்.