ஓபிஎஸ், நத்தத்தை தொடர்ந்து ஒதுக்கி வைக்கப்பட்ட அமைச்சர் பழனியப்பன் ஜெயலலிதாவுடன் சந்திப்பு
சென்னை: ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதனைப் போல கட்சியில் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் முதல்வர் ஜெயலலிதாவை நேற்று சந்தித்து பேசி தன்னிலை விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.
அதிமுகவில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்தில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருந்தார். அவரது தலைமையிலான 5 அமைச்சர்கள்தான் கட்சியில் அசைக்க முடியாத சக்தியாக இருந்தனர்.
அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் பல கோடி ரூபாய் பணம் வாங்கியது, முறைகேடாக சொத்து குவித்தது என பல குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன் ஆகியோர் அதிமுகவில் திடீரென ஓரங்கப்பட்டனர்
ஜெயலலிதா திடீரென அமைச்சர் வைத்திலிங்கம் தலைமையில் எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி ஆகிய அமைச்சர்கள் அடங்கிய நால்வர் அணிக்கு முக்கியவத்துவம் தந்தார். தற்போது அதிமுகவில் அவர்கள்தான் முக்கிய பங்கு வகித்து வருகிறார்கள்.
பழனியப்பன் ஆதரவாளர்
ஓரங்கட்டப்பட்ட அமைச்சர்களின் ஆதரவாளர்களின் பதவி அதிரடியாக பறிக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பனின், ஆதரவாளரான மாவட்டச் செயலாளர் பூக்கடை முனுசாமியின் பதவியும் பறிக்கப்பட்டது. இந்த விவகாரத்தை எதிர்க் கட்சிகள் கிளப்பியதோடு, அமைச்சர்கள் பணம் குவித்திருந்தால் அதை அரசுக் கருவூலத்தில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைக்க ஆரம்பித்தனர்.
ஜெ. விடம் விளக்கம்
இதனால் கட்சியில் தான் எடுக்கும் நடவடிக்கைகள் தனக்கே பூமராங் ஆவதை உணர்ந்தார் முதல்வர் ஜெயலலிதா. இதையடுத்து பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கடந்த 18ம் தேதி போயஸ் கார்டன் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினர். இதனால், நால்வர் அணியுடன் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரும் அவ்வப்போது வெளியில் தலைகாட்ட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
பழனியப்பன் செல்வாக்கு
அதிமுகவில் ஐவர் அணியில் அங்கம் வகித்த அமைச்சர் பழனியப்பனை சந்தித்தால் சீட் வாங்கி விடலாம் என்ற நிலைமை தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுகவினர் மத்தியில் இருந்து வந்தது. இதை வைத்து கட்சியினரிடம் பணம் வசூலிக்கப்பட்டதாக ஜெயலலிதாவின் பார்வைக்கு உளவுத்துறை போலீசார் கொண்டு சென்றனர். இதையடுத்து பழனியப்பனும் ஒதுக்கப்பட்டார். மேலும் விசாரணை வளையத்திற்குள் வந்தார்.
ஓரங்கட்டப்பட்ட பழனியப்பன்
இச்சம்பவத்தை தொடர்ந்து அமைச்சர் பழனியப்பன் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடாது என்றும், கட்சியினர் யாரும் இவரை தொடர்பு கொள்ளவோ, பார்க்கவோ கூடாது என்றும் மறைமுக உத்தரவு கட்சி தலைமை மூலம் பிறப்பிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழனியப்பன் ஆதரவாளர்கள் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர்.
சொந்த ஊர் வருகை
கடந்த ஒரு மாதகாலமாக பழனியப்பன் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. பழனியப்பன், சொந்த ஊரான மோளையானூருக்கு ஞாயிறன்று இரவு வந்தார். வழக்கமாக அமைச்சர் வரும்போது, அவரை காண கட்சியினர் பலர் மணிக்கணக்கில் காத்து கிடந்து பார்த்து செல்வதுண்டு. ஆனால், இம்முறை அவர் வந்தபோது, யாரும் வரவில்லை. ஞாயிறன்று இரவே உடனடியாக சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்.
ஜெவை சந்தித்த பழனியப்பன்
இந்நிலையில் திங்கட்கிழமையன்று காலை 10 மணிக்கு சென்னை, போயஸ் கார்டன் சென்று முதல்வர் ஜெயலலிதாவை அமைச்சர் பழனியப்பன் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடம் நடைபெற்றது. சந்திப்புக்கு பிறகு வெளியே வந்த பழனியப்பன், மிகவும் சோகமாகவே காணப்பட்டார்.
6 பேர் அணி
ஜெயலலிதாவை சந்தித்து விளக்கம் அளித்த பிறகு, 6 பேர் அணியுடன் பழனியப்பனும் சேர்த்துக் கொள்ளப்படுவார் என்று கட்சி தொண்டர்கள் மத்தியில் கருத்து நிலவியது. ஆனால், திங்கட்கிழமை மாலை சென்னை, ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில், பல்வேறு இயக்கங்கள் வரும் தேர்தலில் அதிமுகவுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து கடிதம் அளித்தனர்.
ஏழுபேர் அணியாகுமா?
அப்போது அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி ஆகிய 6 பேர் மட்டுமே பங்கேற்றனர். அமைச்சர் பழனியப்பன் இடம் பெறவில்லை. இதனால் பழனியப்பன் மீதான தலைமையின் கோபம் இன்னும் தொடர்வதாகவே தெரிகிறது.