பூட்டி இருந்த வீடு.. அப்படியே சுவர் ஏறி குதித்த அதிகாரிகள்.. செந்தில் பாலாஜி ரெய்டில் ஒரே பரபரப்பு
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கரூரில் பூட்டப்பட்டிருந்த வீட்டில் அதிகாரிகள் எகிறிக் குதித்து உள்ளே சென்ற பரபர சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகின்றனர்
தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சராக உள்ளவர் செந்தில் பாலாஜி.. அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் செந்தில் பாலாஜி மீது தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.
இதற்கிடையே இவருக்குத் தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் ரெய்டு நடந்து வருகிறது. வருமான வரித்துறையினர் நடத்தும் இந்த ரெய்டு காலை தொடங்கி இப்போது வரை தொடர்ந்து வருகிறது.

ரெய்டு:
கரூர், சென்னை, கோவை மட்டுமின்றி ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களிலும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய பல இடங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.. பல இடங்களில் ரெய்டு நடந்து வரும் நிலையில், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கின் கரூர் ராமேஸ்வரப்பட்டி வீட்டிலும் ஐடி அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
இது மட்டுமின்றி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் தொழில் முறை நண்பர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள் மற்றும் சில குறிப்பிட்ட உறவினர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ரெய்டால் கரூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகளைப் பொதுமக்கள் சுற்றி வளைத்து வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கண்ணாடி உடைப்பு:
குறிப்பாக, அதிகாரிகளின் கார் கண்ணாடியும் உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே சோதனை நடத்த முடியவில்லை என்று அதிகாரிகள் போலீஸ் நிலையத்திலும் தஞ்சமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதாவது பொதுவாகச் சோதனைக்கு ஒரு மணி நேரம் முன்பு பாதுகாப்பு கேட்கப்படும் என்றும் ஆனால், இன்று அப்படி யாரும் பாதுகாப்பு கோரவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், சோதனை குறித்த அறிந்தவுடன் இப்போது 9 இடங்களுக்கு 150 போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர் என்றும் போலீசார் கூறுகின்றனர். இந்த வருமான வரித்துறை சோதனை குறித்தும் பல்வேறு அரசியல் தலைவர்களும் பல வித கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே கரூரில் சோதனை செய்யச் சென்ற அதிகாரிகள் வீட்டின் சுவரைத் தாண்டி குதித்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.

சுவர் ஏறி குதித்து:
கரூரில் இன்று செந்தில் பாலாஜியின் நண்பர் தங்கராஜ் என்பவர் வீட்டில் சோதனைக்கு அதிகாரிகள் சென்றுள்ளனர். இருப்பினும், தங்கராஜும் அவரது குடும்பத்தினரும் வெளியே சென்றதால் வீடு பூட்டப்பட்டிருந்தது. வீட்டின் உள்ளே யாரும் இல்லாத நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் சுவர் ஏறிக் குதித்து சோதனைக்கு உள்ளே சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ இப்போது இணையத்தில் பரவி வருகிறது.
வீடு வெளிப்புறம் பூட்டப்பட்டிருந்த நிலையில், எப்படி அதிகாரிகள் உள்ளே குதித்து சோதனை செய்யலாம் என்று விமர்சித்து திமுகவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ரெய்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பல இடங்களில் திமுக தொண்டர்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications