என்மீதான குற்றச்சாட்டை ஸ்டாலின் நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார்.. வேலுமணி சவால்
டெல்லி: என் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் நிரூபித்தால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத்தயார். அரசியலை விட்டும் விலகத் தயார். நிருபிக்காவிட்டால் மு.க ஸ்டாலின் திமுக தலைவர் பதவியில் இருந்து விலகுவாரா? என்று அமைச்சர் வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில், 2017-18ம் நிதியாண்டில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, தமிழக அரசுக்கு தேசிய விருது வழங்கபட்டது. மத்திய அரசு டெல்லியில் ஏற்பாடு செய்திருந்த விழாவில் இன்று, தேசிய விருதை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வேலுமணி பெற்றுக்கொண்டார்.

இதன்பிறகு டெல்லியில் நிருபர்கள் கேள்விகளுக்கு வேலுமணி பதிலளித்தார். அவர் கூறியதாவது: உள்ளாட்சி துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக மத்திய அரசிடமிருந்து 6 விருதுகளை தமிழகம் பெற்றுள்ளது.
இப்படி சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் நிலையில், தமிழக அரசை கவிழ்க்க திமுக முயற்சிகள் எடுத்தன. அவை தோல்வியடைந்து வருகின்றன. முதல்வர், துணை முதல்வரை தொடர்ந்து அமைச்சர்கள் ஒவ்வொருவரின் மீதும் திமுக குற்றம் சாட்டி வருகிறது.
அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை சிறப்பாக செயல்படுகிறது. ஆனால், தமிழக அரசை கலைக்க வேண்டும் என்றும், கட்சியை முடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தவறான கருத்துக்களை எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன.
உள்ளாட்சி துறை விதியை மீறி எந்த டெண்டரும் வழங்கப்படவில்லை. என் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் நிரூபித்தால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத்தயார். அரசியலை விட்டும் விலகத் தயார். நிருபிக்காவிட்டால் மு.க ஸ்டாலின் திமுக தலைவர் பதவியில் இருந்து விலகுவாரா? இவ்வாறு அமைச்சர் வேலுமணி கூறினார்.












Click it and Unblock the Notifications