ஜெ. வழக்கில்தான் அத்தனை அமைச்சர்களின் கவனமும், அரசு நிர்வாகம் ஸ்தம்பிப்பு: தமிழிசை
சென்னை: தமிழக அமைச்சர்களின் கவனம் முழுவதும் ஜெயலலிதா மீதான வழக்கிலேயே இருப்பதால், தமிழகத்தில் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது என குற்றம் சாட்டியுள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.
அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பு சார்பில் மதுவிலக்கை அமல்படுத்த கோரி நேற்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில், தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், பொது செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டியின்போது,
அசாதாரண சூழல்...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து அதிமுகவினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் தற்போது அசாதாரண சூழ்நிலை நிலவி உள்ளது.
மத்திய அரசு...
தமிழகத்தில் தற்போதுள்ள சட்டம்&ஒழுங்கு பிரச்னையை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. இதுதொடர்பாக தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் மத்திய அரசிடம் புகார் தெரிவிப்போம்.
அரசு நிர்வாகம் ஸ்தம்பிப்பு...
தமிழக அமைச்சர்கள் எண்ணம் முழுவதும் ஜெயலலிதா மீதான வழக்கு நோக்கியே தற்போது சென்று கொண்டிருக்கிறது. இதனால் அரசு நிர்வாகம் வெகுவாக ஸ்தம்பித்துள்ளது. குறிப்பாக தீபாவளிக்கான சிறப்பு பஸ்கள் இன்னும் அறிவிக்கவில்லை.
போனஸ் இல்லை...
உயர்த்தப்பட்ட ஆம்னி பஸ் கட்டணம், தனியார் பால் விலையை கட்டுப்படுத்த முடியவில்லை. அரசு ஊழியர்களுக்கு இன்னும் போனஸ் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சொத்துப் பட்டியல்...
ஊழலற்ற நிர்வாகம் பாஜவின் தாரகமந்திரமாக இருந்து வருகிறது. அதனால்தான் மத்திய அமைச்சர்கள் தங்களுடைய சொத்துப்பட்டியலை அளித்துள்ளனர். அதே போல தமிழக அமைச்சர்களும் தங்களுடைய சொத்துப்பட்டியலை அளிக்க வேண்டும்.
படிப்படியாக மதுவிலக்கு...
பூரண மதுவிலக்கு பாஜக கொள்கையாக இருந்து வருகிறது. தமிழகத்தில் முழுமையாக மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்தா முடியாவிட்டாலும், படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
விரைவில் போராட்டம்...
மதுவிலக்கு வருமானத்தை நம்பி நலத்திட்ட உதவியை வழங்குவதற்கு பதிலாக, வேறு எவ்வளவோ வழிகள் உள்ளன. மதுவிலக்கை அமல்படுத்த கோரி பாஜ சார்பில் விரைவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.
எங்கள் நோக்கமல்ல...
ஒரு ஆட்சியை கலைப்பது எங்கள் நோக்கம் அல்ல. எனவே, தமிழகத்தில் மக்களுக்கான திட்டங்களை அமைச்சரவையை கூட்டி உடனடியாக நிறைவேற்ற வேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.