சசிகலா கொடுத்த பதவியை தைரியமிருந்தா ராஜினாமா பண்ணுங்க - தங்க தமிழ்செல்வன்
சசிகலா கொடுத்த பதவியை அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் தைரியமிருந்தால் ராஜினாமா செய்யட்டும் என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ் செல்வன் கூறியுள்ளார்.
சென்னை: செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், சிவி சண்முகம், ஜெயக்குமார் ஆகியோர் சசிகலா கொடுத்த கட்சிப்பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ் செல்வன் எம்எல்ஏ கூறியுள்ளார்.
60 நாட்கள் அமைதியாக இருந்த டிடிவி தினகரன் கடந்த 4ஆம் தேதியன்று தனது ஆதரவாளர்கள், எம்எல்ஏக்களுக்கு கட்சி பதவியை அளித்தார். சில எம்எல்ஏக்கள் முரண்டு பிடித்தனர். பதவி வேண்டாம் என்று சொன்ன சிலர் ஏற்றுக்கொண்டனர்.

ஜெயக்குமார் கிண்டல்
சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவியே கேள்விக்குறியாக இருக்கும் போது, சசிகலா நியமித்த டிடிவி தினகரன் துணைச்செயலாளர் பதவி செல்லாது என்றார். அப்படி இருக்கும் போது அவர் கொடுத்த கட்சிப்பதவி மட்டும் எப்படி செல்லுபடியாகும் என்று கேட்டார்.

அமைச்சர்கள் கேள்வி
தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, சிவி சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரும் டிடிவி தினகரனின் நியமனத்திற்கு எதிரான கருத்துக்களையே கூறி வருகின்றனர். இதற்கு பதிலடி தரும் விதமாக பேசியுள்ளார் தங்க தமிழ் செல்வன்.

எல்லாமே சசிகலா நியமனம்தான்
செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ் செல்வன், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், சிவி சண்முகம், ஜெயக்குமார் ஆகிய அனைவருமே சசிகலா கொடுத்த கட்சிப்பதவியில்தான் நீடிக்கின்றனர். அப்போ அதெல்லாம் செல்லாதா என்று கேட்டார்.

ராஜினாமா பண்ணட்டும்
இன்றைக்கு டிடிவி தினகரனை கேள்வி கேட்கும் அமைச்சர் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் தைரியமிருந்தால் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்யட்டும் என்று கூறினார் தங்க தமிழ் செல்வன்.












Click it and Unblock the Notifications