மதுவிலக்கு போராட்டத்தை திசை திருப்ப ஆளுங்கட்சியினர் முயற்சி: மு.க. ஸ்டாலின்
சென்னை: பூரண மது விலக்கு கோரி நடைபெறும் போராட்டத்தை திசை திருப்ப ஆளும் கட்சி முயற்சிக்கிறது என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி நடக்கும் போராட்டங்களை திசை திருப்பும் நடவடிக்கைகளில் ஆளுங்கட்சி காவல் துறையின் துணையோடு ஈடுபட்டு வருகிறது. இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது பற்றி திமுக தலைவர் கருணாநிதி மிகவும் தெளிவாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்த கருத்தில் ஏதாவது மாறுபாடுகள் அல்லது அவதூறான நிலையில் அந்த கருத்துகள் இருந்தால் அது குறித்து வழக்கு தொடர்ந்திருக்கலாம்.
பல அவதூறு வழக்குகளை தொடர்ந்த ஆட்சி இது. அதனால் அப்படி வழக்கு தொடராமல் மதுவிலக்கு போராட்டத்தை திசை திருப்ப திட்டமிட்டு அதிமுக மாநிலங்களவை உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் வகையில் போராட்டம் நடக்கிறது என்பது தான் கொடுமை.
ஆளுங்கட்சியினர் இதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இது பற்றி தான் கருணாநிதி அறிக்கை வெளியிட்டார். அனைவரின் கருத்தும் இதுவே என்றார்.