சின்ன திரை, பெரிய திரையைவிட பெரிய கிரிமினல் செல்போன் - ராமதாஸ் 'பொளேர்'
சென்னை: சின்ன திரை, பெரிய திரையைவிட பெரிய கிரிமினலே செல்போன்தான் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சாடியுள்ளார்.
சேலத்தில் தலித் அல்லாத சமூக இயக்கங்களின் தலைவர்கள் பங்கேற்ற "பெண்களின் பாதுகாப்பும், ஐ.நா. ஒப்பந்தங்களும்...தமிழ்நாட்டில் செய்ய வேண்டியது என்ன?" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்கருத்தரங்குக்கு தலைமை வகித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:
பெண்களுக்கு ஆக்கும் சக்தி, காக்கும் சக்தி, அழிக்கும் சக்தி உண்டு. ஆண்களுக்கு சக்தியை கொடுப்பவளே பெண்கள் தான்.
நம்ம வீட்டு பெண்கள் ஸ்கூலுக்கும், கல்லூரிக்கும் நிம்மதியாக போயிட்டு வர முடிகிறதா? சில துஷ்ட மிருகங்கள் பின்னாடியே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இதை பெண்கள் வெளியில் சொல்ல முடியவில்லை. காரணம் நம் அப்பா, அம்மா, பாட்டி யாரும் படிக்கவில்லை....நாம் நன்றாக படிக்க வேண்டும். இதை வீட்டில் சொன்னால் நம்மை கல்லூரிக்கு விடாமல் நிறுத்தி விடுவார்கள் என்ற அச்சத்தில் அவர்கள் சொல்வதில்லை.
பிறகு இந்த நாய்கள் விரிக்கும் வலையில் சிக்கிக் கொள்கிறார்கள். காதல் என்பது வயது வந்த பிறகு விரும்பியவனை அம்மாவிடம் சொல்லி திருமணம் செய்து கொள்வது தான் காதல்.
ஸ்வாதி என்ற ஐயங்கார் பெண் காதலிக்கவில்லை என்ற காரணத்திற்காக ஒரு கொடியவன் வாயிலேயே வெட்டி இருக்கிறான். அதே போல நவீனா என்ற பெண் தன்னை காதலிக்க வில்லை என்ற காரணத்திற்காக ஒரு மிருகம் பெட்ரோலை ஊற்றி பற்ற வைத்திருக்கிறான்.
பெண்களின் திருமண வயது 21ஆக உயர்த்த வேண்டும். இங்கு வந்திருக்கும் பெண்கள் நம்ம வீட்டு பெண்ணை காதல் என்று கடத்திட்டு போகிறார்களே?. இந்த அநியாயத்திற்கு ஒரு முடிவு கட்ட ஒரு வழியை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
10வது படிக்கும் பெண் காதலிப்பதாக திரைப்படங்களில் காட்டுகிறான். சின்ன திரை பெரிய திரையை விட பெரிய கிரிமினல் இந்த செல்போன்தான்.
இவ்வாறு ராமதாஸ் பேசினார்.