மீண்டும் தலையெடுக்கும் பெண் சிசு கொலை- தருமபுரியில் தாய், பாட்டி கைது!
தருமபுரி: தர்மபுரியில் பெற்ற தாயும், பாட்டியும் சேர்ந்து பெண் குழந்தையை விஷம் கொடுத்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் குப்பன் . இவர் அரசு கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியராக வேலைப்பார்த்து வருகிறார். இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள இத்தம்பயினருக்கு கடந்த ஆண்டு மீண்டும் ஒரு குழந்தை பிறந்தது. இந்நிலையில் பிறந்த ஒரு வாரத்தில் அக்குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்து விட்டதாக தெரிவித்திருந்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் உறுப்புகள் ரசாயன பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து பாப்பிரெட்டிப்பட்டி கொலை வழக்காக மாற்றி தாய் வனிதா, பாட்டி அமுதா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இரண்டாவது குழந்தையும் பெண்ணாய் பிறந்த காரணத்தினால் இந்த கொலையை அவர்கள் செய்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே தருமபுரி பகுதிகளில் பெண்சிசு கொலை அதிகம் நடைபெற்றதாலே தொட்டில் குழந்தை திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications