கள்ளத்தொடர்பு வைத்த 'குடி'மகன்: ரயில் முன்பு பாய்ந்து மாமியார், மருமகள் தற்கொலை
கடலூர்: குடும்பத் தகராறில் பெண்ணாடத்தில் மாமியார், மருமகள் ஆகியோர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் சோழன்நகரைச் சேர்ந்தவர் சங்கர்(26). தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அவருக்கும் பெண்ணாடம் அருகே உள்ள அருகேரியைச் சேர்ந்த அவரது மாமா மகள் கலைமதிக்கும்(22) கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.
குடிப்பழக்கம் உள்ள சங்கருக்கு சில பெண்களுடன் கள்ளத்தொடர்பு இருந்ததை கலைமதி கண்டுபிடித்துவிட்டார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சங்கரை அவரது தாய் இந்திராணி(50) கண்டித்தும் அவர் திருந்தவில்லை. இதையடுத்து கலைமதி தான் தற்கொலை செய்யப் போவதாக மாமியார் இந்திராணியிடம் அடிக்கடி தெரிவித்து வந்துள்ளார். அதற்கு இந்திராணியோ இப்படி ஒரு மகனை பெற்றதற்கு நான் தான் தற்கொலை செய்ய வேண்டும் என்று கலைமதியிடம் கூறி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை தற்கொலை செய்வது பற்றி மாமியார், மருமகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கலைமதி தற்கொலை செய்ய பெண்ணாடம் ரயில் நிலையத்திற்கு செல்ல அவவரை இந்திராணியும் பின் தொடர்ந்தார். ரயில் நிலையத்தில் இந்திராணி கலைமதியை எவ்வளவோ சமாதானம் செய்ய முயன்றும் முடியவில்லை.
அப்போது அங்கு வந்த நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு இந்திராணி பாய, அடுத்த நொடியே கலைமதியும் ரயில் முன்பு குதிக்க இருவரும் உடல் சிதறி பலியாகினர்.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.