மாப்பிள்ளையுடன் சேர்ந்து பெற்ற மகனையே ரூ. 1 லட்சம் கொடுத்து போட்டு தள்ளிய "பாசக்கார" தாய்
சொத்து தகராறால் பெற்ற மகனையே கொல்வதற்கு ரூ. 1 லட்சம் கொடுத்து கூலிப்படையை ஏவி அவரது தாய் கொலை செய்தார்.
உதய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் சொத்து தகராறால் பெற்ற மகனையே கொலை செய்வதற்கு கூலிப்படையினரிடம் ரூ.1 லட்சத்தை கொடுத்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரதாப்கர் மாவட்டம் சோட்டி சாத்ரியை சேர்ந்தவர் பிரேமலதா சுதர். இவருக்கு மோஹித் (21) என்ற மகன் இருந்தார். இவரது மகளை கிஷான் சுதர் என்பவருக்கு திருமணம் செய்து வைத்து அவர்கள் இருவரும் போம்பரி கிராமத்தில் குடியிருந்து வருகின்றனர்.
பிரேமலதாவின் கணவர் சமீபத்தில் இறந்து போனார். இந்நிலையில் போதைக்கு அடிமையான மோஹித்துடன் வசித்து வந்த தாய் தினமும் மகனால் சித்திரவதை அனுபவவித்து வந்தார்.

நிலத்தை விற்க
இதனால் வெறுப்படைந்த பிரேமலதா போம்பரி கிராமத்தில் வசிக்கும் மகளது வீட்டுக்கு கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் சென்றுவிட்டார். இந்நிலையில் ஹேமலதா தன்னிடம் இருந்த நிலத்தை விற்பதற்காக மகாதேவ் என்பவரை அணுகினார்.

கணபத் சிங்
ஆனால் அந்த நிலத்தை விற்பனை செய்ய மோஹித் ஒத்துழைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மகனை தீர்த்து கட்டுவதற்காக மகாதேவின் உதவியை நாடினார். அவரும் ராணிகேதா கிராமத்தில் தாபா நடத்தி வரும் கணபத் சிங் ராஜ்புட் என்பவரிடம் ஹேமலதாவை அழைத்து சென்றார்.

ரூ. 50 ஆயிரம் முன்பணம்
அவரிடம் மோஹித்தின் போட்டோவை கொடுத்தபோது, இவர் நம் கடையில் அடிக்கடி உணவருந்த வருவார் என்ற விவகாரம் கணபத்துக்கு நினைவுக்கு வந்தது. வேலை சுலபமாவதை எண்ணி மகிழ்ச்சி அடைந்த ஹேமலதா, முன்பணமாக ரூ. 50000-த்தை கணபத்திடம் கொடுத்தார். மீதமுள்ள 50 ஆயிரத்தை வேலையை கச்சிதமாக முடித்துக் கொடுத்தவுடன் கொடுப்பதாக உறுதியளித்தார்.

வீட்டுக்கு புறப்பட்டார்
இதையடுத்து கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி மோஹித், கணபத்தின் தாபாவுக்கு வந்தார். அப்போது அவர் கேட்ட உணவில் கணபத் தூக்க மாத்திரையை கலந்தார். இதை சாப்பிட்டவுடன் மோஹித்துக்கு ஒரு பீரும் வழங்கப்பட்டது. இதையடுத்து தனது பைக்கை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார்.

மற்றொரு பீர் பாட்டில்
அதிக போதையில் இருந்ததால் மோஹித்துடன் கணபத்தின் பணியாளர் அனில் நாயக் என்பவரும் உடன் சென்றார். இவர்களை கணபத் உள்ளிட்டோர் பின்தொடர்ந்தனர். சிவானா என்ற இடத்தில் வண்டியை நிறுத்திய அனில் நாயக், மோஹித்துக்கு மற்றொரு பீரை கொடுத்து குடிக்கச் சொன்னார். இதனால் போதை தலைக்கேறிய மோஹித் தனது சுயநினைவை இழந்தார்.

போலீஸ் விசாரணை
பின்னர் கணபத் ஒரு துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு எல்லோரும் ஒன்று தெரியாதது போல் தாபாவில் அவரவர் வேலையை செய்தனர். ஆள் அரவமில்லாத நிம்பாஹேதா சாலையில் ஒரு சடலம் கிடப்பதாக வந்த தகவலை அடுத்து போலீஸார் அங்கு சென்றனர். இந்த கொலையை துப்பு கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த போலீஸாருக்கு அங்கிருந்த டோல்கேட்டில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் மிகவும் உதவியாக இருந்தன. இதை வைத்து கணபத்திடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

ஒருவருக்கு வலை
அப்போது நடந்தவற்றை கணபத் ஒப்புக் கொண்டார். அவரிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து ஹேமலதா, மருமகன் கிஷான் சுதர், கணபத், மகாதேவ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியான அனில் நாயக்கை போலீஸார் தேடி வருகின்றனர். கேவலம் சொத்துக்காக பெற்ற மகனையே கூலிப்படையை ஏவி தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications