இடியப் போகும் மவுலிவாக்கம் 11 மாடிக் கட்டடம்... அருகாமை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
11 மாடி கட்டிடம் நாளை இடிக்கப்படுவதையொட்டி மவுலிவாக்கத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: மவுலிவாக்கத்தில் உள்ள 11 மாடி கட்டிடம் இன்று மதியம் இடிக்கப்பட உள்ளது. இதனால் மவுலிவாக்கத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை போரூரை அடுத்துள்ளது மவுலிவாக்கம். இங்கு 11 மாடி கட்டிடம் இரண்டு கட்டப்பட்டன. இதில் ஒன்று 2014ம் ஆண்டு ஜுன் மாதம் 28ம் தேதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் 61 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும 27 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இடிந்து விழாமல் இருந்த மற்றொரு 11 மாடிக் கட்டிடத்தை இடிக்க உத்தவிட்டது. அதற்கான நடவடிக்கையில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஈடுபட்டது. அதன் தொடர்ச்சியாக நாளை இந்த 11 மாடி கட்டிடம் வெடி வைத்து இடிக்கப்பட உள்ளது. அதற்கான முழு ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
இதனையடுத்து, இடிக்கப்படும் 11 மாடி கட்டிடத்திற்கு அருகில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள், அவசரகால ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட உள்ளன. மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடம் உள்ள பகுதியை சுற்றி 100 மீட்டர் தூரத்தில் உள்ள அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கட்டிடம் இடிக்கப்படுவதற்கு முன் அப்பகுதியில் உள்ள அனைத்து மக்களும் வெளியேறிவிட்டார்களா என்பதை போலீசார் உறுதி செய்து வருகின்றனர்.
அதே போன்று, மாணவ-மாணவிகளுக்கு பாதிப்புகள் ஏதும் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மவுலிவாக்கத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.