நெடுவாசல் மக்களின் உணர்வை புரிந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும்.. டி. ராஜா வேண்டுகோள்
நெடுவாசல் கிராம மக்களின் உணர்வை புரிந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று ராஜ்ய சபா எம்பி டி. ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை: நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா பங்கேற்றார்.
அப்போது, வறட்சியின் பிடியில் தமிழ்நாடு சிக்கியுள்ளதாக கூறிய டி.ராஜா, பாஜக அரசால் விவசாயிகள் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதாக கூறினார்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் மத்திய அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டிய டி.ராஜா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நியாயமான காரணம்
ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து காலதாமதம் இல்லாமல் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நெடுவாசல் மக்கள் இந்தத் திட்டத்தை எதிர்க்க நியாயமான காரணங்கள் இருக்கின்றன.
குடிநீர் பாதிப்பு
இந்தத் திட்டத்தை செயல்படுத்தினார் நிலத்தடி நீர் பாதிக்கப்படும். அதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். விவசாயம் நொடிந்து போய்விடும் என்று நெடுவாசல் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதில் உள்ள நியாயத்தை யாரும் தவறு என்று சொல்லிவிட முடியாது.
வறட்சியின் பிடி..
தற்போது, தமிழகம் வறட்சியின் பிடியில் இருக்கிறது. காவிரி நதிநீர் பிரச்சனை உட்பட பல்வேறு நதி நீர் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. தமிழ் நாட்டிற்கு தண்ணீர் என்பது பெரும் பிரச்சனையாக மாறியிருக்கிறது.
பாஜகவின் புறக்கணிப்பு
குடிநீர் முதல் விவசாயத்திற்கு தேவையான நீர் வரை தமிழகத்திற்கு சவாலாக இருக்கிறது. இந்த நீர் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு தமிழகத்திற்கு துணை நிற்க வேண்டும். ஆனால் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு துணை நிற்கவில்லை. தமிழகத்தின் நியாயங்களை புறக்கணிக்கும் விதத்தில் மத்திய அரசு செயல்படுகிறது.
தொடரும் போராட்டம்
தமிழ்நாட்டின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல், நியாயங்களை உணராமல் மத்திய மோடி அரசு செயல்படுகிறது. இந்த நிலையில் நெடுவாசல் மக்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இது தமிழகத்தின் ஒட்டுமொத்த போராட்டமாகவே கருத வேண்டும்.
நாடாளுமன்றத்தில் குரல்
இப்போதாவது, மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுகிறோம் என்று அறிவிக்க வேண்டும். அதுவரை இந்தப் போராட்டம் தொடரும். இது குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன். பெட்ரோலியத் துறை அமைச்சரை சந்தித்து இதுகுறித்து பேசுவேன்.