ஸ்டாப்பில் நிற்காமல் போன பேருந்து… நிறுத்தச் சொன்ன பெண் பயணியை அறைந்த கண்டக்டர்
சென்னை: பஸ் ஸ்டாப்பில் நிற்காமல் போனதை தட்டிக்கேட்ட பெண் என்ஜீனியரை அரசு பேருந்தின் கண்டக்டர் ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் தீபிகா, 23. சென்னையை அடுத்த கேளம்பாக்கம் படூரில் உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது தந்தை பாலசுப்பிரமணியன் கும்பகோணத்தை சேர்ந்த தீபிகா, காரப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜீனியராக பணியாற்றி வருகிறார்.
தினமும் மாநகர பேருந்தில் வேலைக்கு வந்து செல்வது வழக்கம். சம்பவத்தன்று காலையில் மாமல்லபுரம் - அடையாறு செல்லக்கூடிய தடம் எண்: 568 பேருந்தில் படூரில் ஏறினார். காரப்பாக்கத்திற்கு டிக்கெட் கேட்டார். அதற்கு கண்டக்டர் மகேஷ் (43) காரப்பாக்கத்தில் பேருந்து நிற்காது என்று கூறினார். எல்லா பேருந்துகளும் நிற்கிறது. நீங்க மட்டும் நிறுத்தாமல் செல்வது எப்படி? என கேட்டார். அதற்கு அவர் இது எக்ஸ்பிரஸ் பேருந்து எல்லா நிறுத்தங்களிலும் நிற்காது. முக்கிய நிறுத்தங்களில் மட்டும் தான் நிற்கும் என்றார்.
இதில் தீபிகாவிற்கும் கண்டக்டருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. கண்டக்டர் தன்னை தரக்குறைவாக பேசியதை தீபிகா தனது செல்போனில் பதிவு செய்தார். இதை பார்த்த கண்டக்டர் தீபிகாவின் செல்போனை கீழே தட்டி விட்டார். மேலும் அவரது கன்னத்திலும் அறைந்தார். இது தீபிகாவின் செல்போனில் படத்துடன் பதிவாகி இருந்தது.
ஓடும் பேருந்தில் பெண் என்ஜீனியர் - கண்டக்டர் இடையே நடந்த தகராறை எந்த பயணியும் தட்டி கேட்கவில்லை. வேடிக்கை பார்த்து கொண்டே பயணித்தனர். கண்டக்டர் தன்னை தாக்கியது பற்றி கேளம்பாக்கம் போலீசில் தீபிகா புகார் செய்தார். செல்போனில் உள்ள ஆதாரங்களை எடுத்து காட்டி நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார். ஆனால் போலீசார் சமாதான முயற்சியில் ஈடுபட்டனர். அதை தீபிகா ஏற்கவில்லை.
சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நான் உயர் அதிகாரிகளிடம் செல்வேன் என்று கூறினார். இதையடுத்து கண்டக்டர் மகேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வாய் தகராறு மற்றும் தாக்குதல் ஆகிய 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதையொட்டி அவர் சமாதானம் அடைந்தார். ஓடும் பேருந்தில் பெண் என்ஜீனியரை கண்டக்டர் ஒருவர் அறைந்த சம்பவம் கேளம்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையில் மாநகர பஸ்கள் எந்த இடத்தில் நிற்க வேண்டுமோ அந்த இடத்தில் நிற்பது கிடையாது. சிறிது தூரம் கடந்து தான் நிற்பது வழக்கம். இதனை ஒரு படத்தில் காமெடியாகவே உபயோகித்திருப்பார் நடிகர் விவேக்.
வயதானவர்கள், பெண்கள் ஓடிச்சென்று பஸ்சில் ஏறுவதற்குள் பஸ் புறப்பட்டு விடும். அடிக்கடி விபத்தும் நடக்கிறது. ரெகுலாக நின்று செல்லக்கூடிய நிறுத்தங்களில் பஸ் நிற்காது என்று கூறியதால் கண்டக்டருக்கும் பெண் என்ஜினீயர் ஒருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இந்தப் பிரச்சினை போலீஸ் நிலையம் வரை சென்றுள்ளது.