முல்லைப் பெரியாறு தண்ணீர் வீணாக இடுக்கி அணைக்குத்தான் திரும்புகிறது!
தேனி: முல்லைப் பெரியாறு அணை 142 அடி வரைக்கு வந்தும் கூட தமிழகத்திற்கு இதனால் ஒரு பலனும் இல்லை. அதேசமயம், தற்போது அணையிலிருந்து கூடுதல் நீர் கேரளாவுக்கே திரும்பிப் போகிறது. இதனால் ஏற்கனவே பேரழிவில் உள்ள கேரளாவுக்கு மேலும் பாதகமே ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
தனக்குப் போக மற்றதை தானம் கொடு என்பார்கள். ஆனால் கேரளாவில் மட்டும் இது தலைகீழ். எல்லாமே எனக்குத்தான் உனக்கு கிடையாது என்பதே அவர்களின் பிடிவாதமாக காலம் காலமாக இருந்து வருகிறது.
முல்லைப் பெரியாறு ஒரு நல்ல உதாரணம். வீணாக சென்று கடலில் சேரும் தண்ணீரை தமிழகத்திற்குத் திருப்பி வெள்ளையர் ஆட்சியில் கட்டப்பட்டதே இந்த முல்லைப் பெரியாறு அணை. ஆனால் இந்த தண்ணீரை தமிழகம் முழுமையாக பயன்படுத்த கேரளா விடுவதே இல்லை.
முல்லைப் பெரியாறு அணையின் முழுக் கொள்ளளவு 152 அடியாகும். ஆனால் கேரளா இதை தடுத்து 136 அடிக்கு மேல் தேக்க விடாமல் தடுத்து வந்தது. இதை சட்டப் போராட்டத்தின் மூலம் உடைத்த தமிழகம் 142 அடி வரை உயர்த்த உச்சநீதிமன்றத்தின் ஆணையைப் பெற்று தேக்கி வருகிறது. ஆனால் இதனால் தமிழகத்திற்குப் பெரிய பலன் கிடையாது என்பதே உண்மை.
காரணம். அணை மிகவும் தாழ்வான இடத்தில் உள்ளது. இங்கு குறைந்தது 105 அடிக்கு மேல் தண்ணீர் இருக்க வேண்டும். அப்போதுதான் ராட்சத குழாய்கள் மூலம் தமிழகத்திற்கு தண்ணீரை பம்ப் செய்து அனுப்ப முடியும். அதில் ஒரு அடி குறைந்தால் கூட தண்ணீரை அனுப்ப இயலாது. எனவே 105 அடிக்கு கீழ் தண்ணீர் இருந்தால் அது அப்படியே சும்மா கிடக்கும். யாருக்கும் பயன் இல்லை.
மேலும் தமிழகத்திற்கு ஒரு நாளைக்கு அதிகபட்சம் 2300 கன அடி நீர் மட்டுமே வெளியேற்ற முடியும். அதற்கு மேல் இயலாது.
அதேபோல 142 அடிக்கு மேல் தண்ணீரைத் தேக்க அனுமதி இல்லை. இதனால் அதற்கு மேல் வரும் நீர் அப்படியே மீண்டும் கேரளாவுக்கே திரும்பும். அதாவது இடுக்கி அணைக்கே திரும்பும். இப்போது என்ன கொடுமை என்றால் ஏற்கனவே இடுக்கி அணை நிரம்பி வழிகிறது. மேலும் மேலும் வெள்ளப் பெருக்கெடுத்துள்ளது. இந்த நிலையில் தற்போது விநாடிக்கு 25,000 கன அடி அளவில் மீண்டும் முல்லைப் பெரியாறு நீர் இடுக்கி அணைக்கே திரும்புகிறது. இதனால் கேரளாவுக்குத்தான்
பெரும் நஷ்டமாகும்.
மாறாக முழுக் கொள்ளளவுக்கு தமிழகத்தை தண்ணீர் தேக்கி வைக்க அனுமதித்தால் கேரளாவுக்குத்தான் நல்லது நடக்கும். தமிழகத்திற்கும் கூடுதலாக தண்ணீர் கிடைக்கும். ஆனால் அதைச் செய்ய விடாமல் தடுத்து வருகிறது கேரளா.
கடவுள்தான் கேரளாவுக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டும்.