விடுதலையைத் தடுக்கும் மத்திய அரசைக் கண்டித்து... வேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்
வேலூர்: ராஜீவ் கொலைக் குற்றவாளிகளின் விடுதலைக்கு எதிராக இருக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், சிறை அதிகாரிகளின் கெடுபிடிகளைக் கண்டித்தும் வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார் முருகன்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில், நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது, மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி ஆகிய நான்கு பேருக்கும், உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்தது. பின்னர், நளினிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
பின்னர், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து கடந்த 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து இந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் மற்றும் நளினி ஆகிய 4 பேரையும் சேர்த்து மொத்தம் 7 பேரை விடுதலை செய்வது என தமிழக அரசு முடிவெடுத்தது.
இது குறித்து கருத்துக்கேட்டு மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது, தனது கருத்தை தெரிவிப்பதற்கு பதிலாக, தமிழக அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்போதைய மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது.
அதனைத் தொடர்ந்து 3 நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் புதிய அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. எனினும், இதுவரை வழக்கு விசாரணைக்கே வராமல் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே, தாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளதால் தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்தனர். மேலும், தன்னை விடுவிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி ஒரு மனு தாக்கல் செய்தார்.
இவர்கள் 7 பேரும் 24 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்வதற்கான அனுமதி கேட்டு மீண்டும் மத்திய அரசுக்கு தமிழக அரசு மார்ச்.2-ஆம் தேதி கடிதம் எழுதியது.
மார்ச் 5-ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி, உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்ததால், இது அரசியல் உள்நோக்கத்துடன் தமிழக அரசு எடுத்த முடிவு என விமர்சிக்கப்பட்டது. தமிழக அரசின் முடிவிற்கு காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
தற்போது தமிழக அரசின் இந்த கடிதத்தையும் மத்திய அரசு நிராகரித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், சிறையில் உள்ள 7 பேரும் விடுதலை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தங்களது விடுதலைக்கு எதிராக இருக்கும் மத்திய அரசைக்கண்டித்தும், சிறை அதிகாரிகளின் கெடு பிடிகளைக் கண்டித்தும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் இருக்கும் முருகன் நேற்று முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இவர் நளினியின் கணவர் ஆவார். முருகன் உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என சிறை அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இவ்வாறு சிறையில் உண்ணாவிரதம் இருப்பது முருகனுக்கு இது முதல் முறையல்ல. ஏற்கனவே பல்வேறு விசயங்களுக்காக அவர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.