அப்பாவை அதிகாரிகள் மிரட்டியது எனது அம்மாவுக்கும் தெரியும்: முத்துக்குமாரசாமியின் மகன்
திருநெல்வேலி: அப்பாவை வேளாண்மைத்துறை அதிகாரிகள் பணம் கேட்டு மிரட்டியது அம்மாவுக்கும் தெரியும் என்று தற்கொலை செய்துகொண்ட முத்துக்குமாரசாமியின் மகன் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
வேளாண் பொறியியல் துறை அதிகாரி முத்துக்குமாரசாமியின் தற்கொலை விவகாரத்தில், முன்னாள் வேளாண் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை சிபிசிஐடி போலீஸ் கைது செய்தது. பின்னர், நெல்லை மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் ஞாயிற்றுக்கிழமை அவர் அடைக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்டுள்ள, 'மாஜி' அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, செந்தில் ஆகியோர் மீது, இந்திய தண்டனைச் சட்டம், 306வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அபராதத்துடன், 10 ஆண்டுகள் வரை, சிறை தண்டனை விதிக்க முடியும்
நெல்லை மாவட்டம், தென்காசி அருகே உள்ள இலஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி. இருக்கு, சரஸ்வதி என்ற மனைவியும், விஜய், சேதுராம் வினோத் என இரண்டு மகன்களும் உள்ளனர். மகன்கள் இருவரும் சொப்ட்வேர் என்ஜீனியர்களாக சென்னையில் வேலை செய்கின்றனர்.
தந்தையின் தற்கொலை விவகாரத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டிருப்பது குறித்து விஜய் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
அம்மா அதிர்ச்சி
எனது தந்தை இறந்த துக்கம் ஒரு புறம். நாங்கள் மிரட்டப்பட்ட சம்பவங்கள் இன்னொரு புறம் என கடந்த ஒரு மாதமாக நாங்கள் கடும் துயரத்தில் இருந்தோம். மிரட்டலுக்கு பயந்து நெல்லையை காலி செய்துவிட்டு, எனது தாயார் தூத்துக்குடியில் எனது மாமா வீட்டில் வசிக்கிறார். விரைவில் அவர் சென்னையில் எங்களுடன் வந்து வசிப்பார்.
அப்பாவுக்கு மிரட்டல் போன்
நாங்கள் நடுத்தர குடும்பத்தினர், அலுவலகப் பணிகள் குறித்து, என் அப்பா வெளிப்படையாக பேச மாட்டார். அப்பா வீட்டில் இருக்கும் போது, வீடு கலகலப்பாக இருக்கும்; தற்கொலைக்கு முன், அடிக்கடி போன் வருவதும், அதன்பின், அப்பா மிரட்சி அடைவதையும், அம்மா கண்டுபிடித்து விட்டார்.
பத்துமுறையாவது மிரட்டல்
ஒரு நாளைக்கு குறைந்தது, 10 முறையாவது, தலைமைப் பொறியாளர் செந்தில் பேசியுள்ளார்; சம்பவத்தன்றும், காலை 6:00 மணிக்கே, செந்திலிடமிருந்து போன் வந்துள்ளது; பணம் என்னாச்சு? என, கேட்ட போது, அம்மாவும் உடன் இருந்துள்ளார். மதியம் வீட்டுக்கு சாப்பிட வந்துவிடுவேன் என தெரிவித்து சென்ற அப்பா, சிலர் கொடுத்த நெருக்கடிகளால் தற்கொலை செய்து கொண்டார்.
திருப்தியில்லை
அவர்களின் பணத்தாசைக்கு, எங்கள் அப்பாவை பறிகொடுத்து, அனாதைகளாக நிற்கிறோம்; அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டு உள்ளார்; இருந்தாலும், அதில் எங்களுக்கு திருப்தி இல்லை; இது, வெறும் கண்துடைப்பே; இன்னும் நிறைய பேர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் முத்துக்குமாரசாமியின் மகன் கூறியுள்ளார்.