என் மகன் ஒட்டுமொத்த தமிழகத்தின் மகன்: 'அம்மா'விடம் முறையிட்ட ராகவேந்திரனின் தாய்
சென்னை: பிரஸ்ஸல்ஸ் தீவிரவாத தாக்குதலில் பலியான ராகவேந்திரன் கணேசன் தமிழகத்தின் மகன், இந்தியாவின் மகன் என்று அவரது தாய் அன்னபூரணி தெரிவித்துள்ளார்.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள மால்பீக் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் சென்னையை சேர்ந்த இன்போசிஸ் ஊழியர் ராகவேந்திரன் கணேசன் பலியானார்.
வெடிகுண்டு தாக்குதலில் அவரது உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துவிட்டதால் நேற்று மாலை வரை அவரின் பெயர் மாயமானவர்கள் பட்டியலில் இருந்தது. முன்னதாக மும்பையில் வசிக்கும் அவரது தாய் அன்னபூரணி தனது மகனை கண்டுபிடித்துக் கொடுக்குமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஃபேஸ்புக் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இது குறித்து அவர் ஃபேஸ்புக்கில் கூறியிருந்ததாவது,
ஹலோ அம்மா(தமிழக முதல்வர்)
தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள்.
என் மூத்த மகன் ராகவேந்திரன் கணேசன்/ராஜு பெல்ஜியத்தில் வசிக்கிறார். 22ம் தேதி குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. என் மகனை கண்டுபிடிக்க தயவு செய்து நடவடிக்கை எடுங்கள்.
அவர் மாயமாகி இன்றுடன் நான்கு நாட்கள் ஆகிறது. பிரஸ்ஸல்ஸில் இருந்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது பெயர் மாயமானவர்கள் பட்டியலில் உள்ளது.
அவர் என் மகன் மட்டும் அல்ல, அவர் மொத்த தமிழகத்தின் மகன். இந்தியாவின் மகன். எனவே, தயவு செய்து துரித நடவடிக்கை எடுக்கவும். நன்றி என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து ஜெயலலிதா ராகவேந்திரனை கண்டுபிடித்துக் கொடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.