பார்த்துப் பார்த்து வீடு கட்டிய நந்தினி..!
சென்னை: பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் கொள்ளையனால் உயிரிழந்த ஆசிரியை நந்தினி தனது வயதுக்கும் மீறிய முதிர்ச்சியுடன், பொறுப்பை உணர்ந்து, நிறைய கனவுகளை சுமந்தபடி வாழ்ந்து வந்துள்ளார். ஆனால் கொள்ளையன் கருணாகரனால் அத்தனையும் கருகிப் போய் இப்போது நந்தினியின் குடும்பமே நிர்க்கதியில் தள்ளப்பட்டுள்ளது.
ஆசிரியை நந்தினி குறித்து அப்பகுதியினர் சிலாகித்துப் பேசுகின்றனர். வீட்டுக்கு மூத்த பெண்ணான நந்தினி, தனது தாய், தந்தை, தம்பி மீது உயிராக இருப்பாராம். அவ்வளவு பொறுப்பாக தனது குடும்பத்தைப் பார்த்துக் கொண்டாராம்.
இவர் தலையெடுத்து வேலைக்குப் போக ஆரம்பிக்கும் வரை குடும்பத்தை வறுமை பீடித்து சிரமப்பட்டுள்ளனர். இவர் வேலைக்குப் போக ஆரம்பித்த பின்னர்தான் நிலைமை மாறி நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.
நிறைய ஆசைகள்
நந்தினி வேலைக்குப் போக ஆரம்பித்த பிறகு ஒட்டுமொத்த குடும்ப பாரத்தையும் தன் மீது தூக்க வைத்துக் கொண்டார். அவருக்குள் நிறைய ஆசைகள். அம்மா, அப்பாவை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். சின்னதாக, சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும். தம்பியை நிறையப் படிக்க வைத்து நல்ல வேலையில் அமர வைக்க வேண்டும் என்பதுதான் அவரது ஆசைகள்.
தன்னைப் பற்றிக் கவலையில்லை
அவர் தன்னைப் பற்றிக் கவலைப்பட்டதே கிடையாதாம். தனக்கு திருமண வயது ஆகி விட்டதே, திருமணம் செய்ய வேண்டுமே என்று கொஞ்சம் கூட அவர் கவலைப்பட்டதே இல்லையாம். எப்போதும் அப்பா, அம்மா, தம்பி என்றுதான் நினைப்பாக இருப்பாராம்.
சொந்த வீடு
நந்தினி வேலைக்குப் போக ஆரம்பித்து, கை நிறைய சம்பளம் வாங்க ஆரம்பித்த பின்னர் வீடு கட்டும் அவரது ஆசை நிறைவேறியது. சொந்தமாக வீடு கட்டத் தொடங்கினார். இதற்காக கடனும் வாங்கியிருந்தார். இந்தக் கடனை அடைக்க தனது செலவுகளை முழுமையாக சுருக்கிக கொண்டாராம். வீட்டுச் செலவு போக தனக்காக எதையுமே அவர் கூடுதலாக வாங்கியதில்லையாம்.
பார்த்துப் பார்த்துக் கட்டினார்
தனது குடும்பம் வசிக்கப் போகும் அந்த கனவு வீட்டை பார்த்துப் பார்த்துக் கட்டி வந்தார் நந்தினி. நமது கனவு நனவாகப் போகிறது என்று வீட்டினரிடம் சந்தோஷமாக கூறியபடி இருப்பாராம். பாதிக்கும் மேல் வளர்ந்து விட்ட அந்த வீடு தற்போது நந்தினியின் மறைவால் பாதியிலேயே நிற்கிறது, அவரது கனவுகளைச் சுமந்தபடி.
அப்பா பேச்சைக் கேட்டிருந்தால்
சம்பவத்தன்று இரவு பணம் எடுக்கப் போய் விட்டு வருவதாக அத்தை பெண் நஜ்ஜுவுடன் நந்தினி கிளம்பியபோது, இந்த நேரத்தில் ஏம்மா போற, குடிகாரர்கள் அதிகமாக உலவும் நேரம் இது. காலையிலேயே போய் பணத்தை எடும்மா என்று கூறி தந்தை வடிவேலு தடுத்துள்ளார். ஆனால் பக்கத்திலதானப்பா போய் விட்டு ஓடி வந்துர்றேன் என்று கூறி விட்டுப் போயுள்ளார் நந்தினி. கடைசியில் அவரது இறந்த உடல்தான் வீட்டுக்கு வந்தது.
போலீஸ் பாதுகாப்புடன் தகனம்
உயிரிழந்த நந்தினியின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் அவரது குடும்பத்தினரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவரது வீட்டுக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் அவரது வீட்டிலிருந்து சாந்தோம் வழியாக மயிலாப்பூர் மின் மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் உறவினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். இரு புறங்களிலும் போலீசார் அரண் போன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு மின் மயானத்தில் நந்தினியின் உடல் எரியூட்டப்பட்டது.