சண்முகநாதனுக்கு அவ்வளவு விலையா? ஒர்த் இல்லையே - நாஞ்சில் சம்பத் குபீர்
எம்எல்ஏ சண்முகநாதன் ரூ. 5 கோடி அளவிற்கு விலை பேசப்படும் அளவிற்கு தகுதியில்லாதவர் என்று அதிமுக அம்மா அணியின் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
சென்னை: ஐந்து கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்படும் அளவிற்கு எம்எல்ஏ சண்முகநாதன் தகுதியானவர் இல்லையே என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், ஒபிஎஸ்,அமைச்சர் ஜெயக்குமாரை கடுமையாக கண்டித்தார்.
டிடிவி தினகரன் கட்சி அலுவலகத்திற்கு எப்போது வருவார் என்று கேட்டதற்கு இன்று ஆடிப்பெருக்கு நல்ல நாள் என்றார். சூரியன் உதயத்தில் வருவார் என்று பதிலளித்தார் சம்பத்.
அதே போல ஜெயக்குமார் பற்றிய கேள்விக்கு நன்றி மறந்து பேசுவதாக குற்றம் சாட்டினார். பதவியை கொடுத்தவர்களை மறந்து விட்டார் என்று கூறினார்.
தூத்துக்குடி எம்எல்ஏ சண்முகநாதன், தனக்கு 5 கோடி தருவதாக டிடிவி தினகரன், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் பேரம் பேசுவதாக குற்றம் சாட்டியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
ஆனால் செய்தியாளர்கள் கேட்டு முடிக்கும் முன்பாகவே, சண்முகநாதனுக்கு அவ்வளவு விலையா என்று கேட்டார் நாஞ்சில் சம்பத். அந்த அளவிற்கு அவர் தகுதியில்லை என்றார். எங்கள் பக்கம் 122 எம்எல்ஏக்கள் இருப்பதாக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனே கூறியுள்ளாரே என்றும் கேட்டார் நாஞ்சில் சம்பத்.