கடற்படை ஊழியருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு... மதுரையில் சிகிச்சை பலனின்றி பலி
மதுரை: மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்த கடற்படை ஊழியர் ஒருவர் சிசிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார் (39). இவர் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளியில் உள்ள கடலோர காவல் படையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு சமீபத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. மேலும். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை குறைவு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, சிறப்பு தனி வார்டில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இது குறித்து மருத்துவமனையின் டீன் வைரமுத்துராஜு கூறுகையில், ‘‘ உயிரிழந்த ரமேஷ் என்பவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, முற்றிய நிலையில் அவர் மருத்துவமனைக்கு வந்ததால் அவரை காப்பாற்ற இயலவில்லை என்று கூறினார்.