மீண்டும் ஒரு கந்துவட்டி பயங்கரம்... தேனியில் 4 பேர் தற்கொலை முயற்சி!
தேனியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கந்துவட்டி கொடுமையால் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
Recommended Video
தேனி : தேனி அருகே கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாரியம்மன்கோவில்பட்டியில் சரவணன், சுதா தம்பதி தனது இரு மகள்களுடன் விஷம் அருந்தியுள்ளனர். சரவணனின் மகள்கள் வைஷாலி, வைஷ்ணவிக்கு முறையே 14 மற்றும் 12 வயதாகிறது. சரவணன் குடும்ப பிரச்னைக்காகவும், தொழில் முதலீட்டிற்காகவும் கந்துவட்டி கடன் வாங்கியுள்ளதாக தெரிகிறது.
நாளுக்கு நாள் கந்துவட்டி கொடுமை அதிகரித்த நிலையில் சரவணன் குடும்பத்துடன் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர்களை மீட்ட அக்கம்பக்கத்து வீட்டார் 4 பேரையும் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆபத்தான நிலையில் உள்ள அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வட்டி கொடுத்து மாளாத மக்கள்
தேனி மாவட்டத்தில் பல ஆண்டுகளாகவே கந்துவட்டிக் கொடுமை தலைவிரித்து ஆடுவதாக அந்தப் பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அரசியல் கட்சியினர், காவல்துறையினரை கையில் வைத்துக் கொண்டு கந்துவட்டிக் கும்பல் மக்களை ஏமாற்றி அதிக வட்டிக்கு பணம் வசூலித்து வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
காவல்நிலையம் முன்பு போராட்டம்
சரவணன் குடும்பத்தினரின் இந்த நிலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அந்தப் பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் பழனிசெட்டிபட்டி காவல்நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சரவணன் குடும்பத்திற்கு நெருக்கடி கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஒருவரை கைது செய்துள்ளது போலீஸ்
இதனையடுத்து போடி சிலமரத்துப்பட்டியைச் சேர்ந்த சுருளி என்பவரை போலீசார் கைது செய்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்பதே அந்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பு
மீண்டும் ஒரு பயங்கரம்
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்று இறுதியில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த நிலையில் தேனியில் மீண்டும ஒரு பயங்கர சம்பவம் நடந்துள்ளது. ஆட்சியாளர்கள் விழித்து கந்துவட்டி கொடுமைகளுக்கு எதிராக தீவிர சட்டத்தை செயல்படுத்த வேண்டிய காலம் இது என்பதை அடுத்தடுத்த சம்பவங்கள் உணர்த்துகின்றன.